சிந்தனைச் சிதறல்.. பள்ளம் இல்லா மேடுகள் இல்லை.. தடைகள் இல்லா சாதனைகளும் இல்லை!
- அ. தாமஸ்
நம் விந்து நிலையிலேயே முந்தி அண்டமடைந்து இன்று அகிலத்தில் அவதானித்து இருக்கிறோம். எனவே உயிரற்ற நிலையிலேயே உந்தி முந்திய நாம் இன்று உயிர்நிலையில் உயர்நிலை அடையும் ஆற்றலைப் பெற்றவர்கள் என்பதை ஏற்று முன்னேற்றத்தில் மட்டுமே முனைப்புக் காட்டுவோம்.
பள்ளம் இல்லா மேடுகள் இல்லை; தடைகள் இல்லா சாதனைகளும் இல்லை. இன்றைய வலிகளே நாளைய வளமான வாழ்வின் வழிகள் என்பதை ஏற்று தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் எழுந்து நடக்கும் உறுதி ஏற்போம். சிரமங்களை கடக்காமல் சிகரங்களை தொட முடியாது என்ற எதார்த்தத்தை அந்நிலையிலேயே ஏற்போம்.
வலி என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்னைப் போல தான் பிறருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்து சமூகத்தின் அவலங்களை கண்டும் காணாமல் கடந்து போவதை விட நம்மால் என்ன முடியுமோ அதை ஆழமாய் சிந்தித்து செயல்படுத்துவதே உயரிய ஆளுமையின் உச்சம் என்பதை உணர்வோம் உயர்வோம்.
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை பிரச்சனைகள் இல்லை எனில் அது வாழ்க்கையே இல்லை; நேற்றைய பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் இன்று பிரகாசிக்கிறார்கள். எனவே சங்கடங்களைக் கடந்து போவதை விட சந்தித்து அது கொடுக்கும் படிப்பினைகளை ஏற்று வீறு நடை போடுவோம்.
பலரும் சிந்திக்கத் தயங்கும் விடயங்களை நாம் சந்திக்கத் துணிந்து விட்டால் நாளை நாம் வளர்ந்த நிலையில் நம்மை சந்திப்பதை மட்டும் தான் பலரும் சிந்திப்பார்கள். எனவே இறைக்கும் இயற்கைக்கும் இயைந்தே துணிச்சலைத் துணையாக்குவோம்.
கல்வி ஒன்றே வறுமையின் அவலத்தையும் சாதியத் தடைகளையும் தகர்க்கும் தனிப்பெரும் ஆயுதம். எனவே சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் கற்றல் ஒன்றிலே கருத்தேற்றி காணும் அனைத்திலும் கற்போம் கற்றலின் வழிதனில் நிற்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)