'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
சென்னை: முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு மற்றும் அதனுடன் தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட சர்ச்சைகள் குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி.பிரபாகர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில் ஜனநாயகன் படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும் என அவர் கூறி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'ஜனநாயகன்' திரைப்படம். நீட் தேர்விற்கு எதிராக நாடு முழவதம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இந்த சமயத்தில் ஜனநாயகன் படம் வெளியிடப்பட்டிருப்பதற்கு பலரும் எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்தனர். ஜனநாயகன் படம் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்பி மாணவர்களின் போராட்ட வீரியத்தை மழுங்கடித்து விட்டதா? என்ற கேள்வி செய்தியாளர்கள் தரப்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "திரைப்படத்திற்கும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. 'ஜனநாயகன்' திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட தேதியில் தான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகியுள்ளது. எனவே, இந்தத் திரைப்பட வெளியீட்டை மாணவர் போராட்டத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறானது" என்று தெரிவித்தார்.
மேலும் அத்திரைப்படம் குறித்துப் பேசிய அவர், "'ஜனநாயகன்' திரைப்படம் மக்களின் மூளைக்குச் சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் தரும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல திரைப்படம். அப்படத்தைப் பார்ப்பதால் மூளைக்கு புத்துணர்ச்சியே ஏற்படுமே தவிர, இது யாருடைய மூளையையும் சலவை (Brainwash) செய்யும் படம் அல்ல. அதேபோல, மாணவர்களின் நியாயமான போராட்ட உணர்வை எந்தவொரு திரைப்படத்தாலும் மழுங்கடித்துவிட முடியாது" என்றும் உறுதியாகக் கூறினார்.
மாணவர்களின் போராட்டப் பின்னணியில் அத்திரைப்படம் வெளியானது குறித்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களும் விவாதங்களும் எழுந்து வந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் இந்த தெளிவான விளக்கம் அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே சமயம் ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பை தரும் என அவர் பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள் பலரும் ஜனநாயகன் படம் பார்க்க சென்றதை விமர்சித்து வரும் நிலையில் சபாநாயகரின் இந்த கருத்து, கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.