மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு

Meenakshi
Nov 04, 2025,05:54 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று அமைதி காத்து வந்தார். அதன்பின்னர் கரூர் துயரத்தில் இறந்தவர்களின் உறவினர்களை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் தான் தனது கட்சி பணிகளை தொடங்கினார். தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியும் வருகிறார்.


இதனையடுத்து, மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,கழகத் தலைவர் தலைமையில், நாளை (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.




எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.