அழகிய மாற்றம்!

Su.tha Arivalagan
Sep 01, 2026,04:48 PM IST

- சுதா திருநாராயணன்


"ஷோபா ஷோபா"  அழைத்தவாறே வந்தாள் சங்கீதா,  ஷோபாவின் அம்மா. 


"போன்விட்டா ஆறி போகுது பார். " பால் டம்ளரை எடுத்து 15 வயது  ஷோபாவின் கையில் கொடுத்தாள் சங்கீதா. 15 வயதிற்கான வளர்ச்சி ஷோபாவிடம் இல்லை. எந்த விஷயத்தையும் பலமுறை சொன்னால்தான் புரிந்து கொள்வாள் ஷோபா. தலையை வாரிக் கொள்ள உடை அணிந்து கொள்ள எல்லாவற்றிற்கும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அவளிடம் சொல்ல வேண்டும். 


இந்த வயதிற்கு அவள் ஏழாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாள். பத்து வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தான் ஷோபா இருந்தாள்.  11 வயதில் காய்ச்சல் வந்து அவளுடைய உடல்நலம் குன்றியது.  ஒன்றரை வருடங்கள் அவள் பள்ளிக்கூடம் போகாமலேயே இருந்தாள். அந்த காலகட்டத்தில் தான் ஷோபாவின் அறிவுத்திறனில் குறைபாடு இருக்கிறது என்பதை சங்கீதா புரிந்து கொண்டாள்.  ஷோபாவிற்கு ஏற்பட்டிருப்பது atypical autism என்ற குறைபாடு என்பதை மருத்துவர் விளக்கினார்.  


Pervasive developmental disorder என்ற இந்த குறைபாடு சட்டென்று வெளியில் தெரியாது. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் பழகுவதிலும் பேசுவதிலும் சற்றே சுணக்கம் காட்டுவார்கள். நாளடைவில் இது சரியாக போய்விடும் என்று மருத்துவர் நம்பிக்கை அளித்தார்.




ஆனால் சங்கீதாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏனென்றால் ஷோபாவின் உடல் நலன் மற்றும் மன நலனில்  எந்த வித முன்னேற்றமும் இல்லை. அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் போன்ற தாக்குதல்களுக்கு ஷோபா ஆளாகிக்  கொண்டு தான் இருக்கிறாள். 


சங்கீதாவும் அவள் கணவன் சேகரும் இறைவனை நம்பி ஷோபாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றனர். 


சமையலறையில் வேலையாக இருந்த சங்கீதா அதிசயமாக ஷோபா "அம்மா" என்று கூப்பிடும் குரல் கேட்டு வெளியில் வந்தாள். ஷோபா வெராண்டாவில் தொட்டி செடிகளுக்கு அருகே அமர்ந்திருந்தாள். அவள் மடியில் இரண்டு கருப்பு பூனை குட்டிகள். " அம்மா பெரிய பூனை குட்டி பூனையை அழைச்சிண்டு வந்தது."  வெகு நாட்களுக்குப் பிறகு ஷோபா கோர்வையாக பேசிய வாக்கியம். 


சங்கீதா சிறிது நேரம் பிரமித்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு ஷோபாவிடம்  "வா பூனைக்கு பால் கொடுக்கலாம் " என்றவாறு ஒரு தட்டில் பாலை வைத்து பூனை குட்டிகளுக்கு அருகில் வைத்தாள். பூனை குட்டிகள் பாலை நக்குவதை ஷோபா அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 


மாலையில் மருத்துவரிடம் சென்ற போது அவர் விளக்கினார். "இம்மாதிரி குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது அவர்களுக்கு விருப்பமான பொருட்கள் கிடைத்தாலோ அவர்களுக்கு குணமாகும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.


ஷோபாவிற்கு பூனை குட்டிகள் பிடித்திருந்தால் நீங்கள் அவைகளை வளர்க்கலாம். ஆனால் வெட்ரினரி டாக்டரிடம் கேட்டு சுகாதார முறையில் பூனை குட்டிகளை வளர்க்க தெரிந்து கொள்ளுங்கள்"  என்று அறிவுரை கூறினார். இறைவன் தங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டான் என்று சேகரும் சங்கீதாவும் சந்தோஷம் அடைந்தனர்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)