சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பின்னால் போய் மடக்கி, அவரது கையில் இருந்த துப்பாக்கியையும் பறித்த முஸ்லீம் பழ வியாபாரி பெரும் பாராட்டுக்குகளைக் குவித்து வருகிறார். இந்த சம்பவத்தின்போது அவரும் குண்டுக் காயம் பட்டுள்ளார். தற்போது மருத்துமனையில் அந்த வியாபாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கூடியிருந்த யூதர்கள் மீது பாகிஸ்தானைப் பூர்விமாகக் கொண்ட தந்தையும், மகனும் நடத்திய துப்பாக்கிச் சூடு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெறிச் செயலில் ஈடுபட்டவர்கள் 50 வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் என்று தெரிய வந்துள்ளது. இதில் சஜித் அக்ரம் கொல்லப்பட்டு விட்டார். நவீத் அக்ரம் உயிருடன் பிடிபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒரு பழ வியாபாரி பெரும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அந்த நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சஜீத் அக்ரமை பின்னால் போய் மடக்கிப் பிடித்து அவரை கீழே தள்ளி துப்பாக்கியையும் பறித்து, பல உயிர்கள் பறிபோவதைத் தடுத்து நிறுத்தினார். இவரது செயலால் பலரும் காப்பாற்றப்பட்டனர். இந்த முயற்சியின்போது அவருக்கும் குண்டுக் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளனர். அந்தப் பழ வியாபாரி, நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்குப் பின்னால் மறைந்து, பின்னர் துப்பாக்கி ஏந்திய நபரை நோக்கிப் பின்னால் இருந்து ஓடிச் செல்வது பதிவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த நபரின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்து, துப்பாக்கியைப் பறித்து, தரையில் தள்ளிவிடுகிறார். பின்னர் அந்தத் துப்பாக்கியை அவனை நோக்கிப் பிடிக்கிறார்.
தீரத்துடன் நடந்து கொண்ட அந்த நபரின் பெயர் அகமது அல் அகமது. 43 வயதான இவர் ஒரு பழ வியாபாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அகமதுவின் உறவினர் ஒருவரான முஸ்தபா இதுகுறித்துக் கூறுகையில், அகமது, மருத்துவமனையில் இருக்கிறார். உள்ளே என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. அவர் நலமாக வருவார் என்று நம்புகிறோம். அவர் 100 சதவீதம் ஒரு ஹீரோ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அகமதுவின் துணிச்சலுக்கும், வேகமான செயலுக்கும் ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அகமதுவை, ஹீரோ என்று வர்ணித்துள்ளார்.