படு சூடாகி வரும் உலகம்.. என்னெல்லாம் ஆபத்து காத்திருக்கு தெரியுமா?
- தி. மீரா
பூமியின் சராசரி வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருவதையே உலகம் வெப்பமயமாதல் என்கிறோம். இதன் விளைவாக உலகம் பல்வேறு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. பனி மலைகள் உருகி வருகின்றன. இயற்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது. கடல் மட்டம் உயர்வதால் பல கடலோர நகரங்களுக்கு ஆபத்து உள்ளது.
பூமி சூடாவதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன.
பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் இதில் முக்கியமானது. வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் அதிகரிப்பதே முதன்மைக் காரணம். இவை சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தைப் பூமிக்குள்ளேயே சிறைபிடித்து வைக்கின்றன.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை எரிக்கும்போது, மிக அதிக அளவில் கார்ன் டை ஆக்சைடு வெளியேறி வளிமண்டலத்தைச் சூடாக்குகிறது.
மரங்கள் இயற்கையாகவே கார்பன் டை ஆக்சைடு வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால், காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடைச் சுத்திகரிக்க முடியாமல் அதன் அளவு அதிகரிக்கிறது.
மின்சார உற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்படும்போது நச்சுப் புகையும் வெப்பமும் வெளியேறுகின்றன. இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையும் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன. கால்நடைகளின் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பல மடங்கு வெப்பத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டது.
வி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகுகின்றன. பனி வெள்ளை நிறமாக இருப்பதால் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்; அது உருகி நீராக மாறும்போது, கடல் நீர் சூரிய வெப்பத்தை அதிகமாக உறிஞ்சத் தொடங்குகிறது. இது மீண்டும் வெப்பத்தை உயர்த்துகிறது.
மனிதர்களின் முறையற்ற செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதே உலக வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாகும். இதை சரி செய்ய உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். செயல்படுவது என்பதை விட பொறுப்பை உணர்ந்து செயல்படுவது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காரணம், நமது பொறுப்பற்ற செயல்பாடுகளால் எதிர்கால சந்ததிகளை நாம் இக்கட்டில் தள்ளி விடுகிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)