யாராவது ஏதாவது செய்து விடலாம் என விஜய் அஞ்சுவது போல தெரிகிறது.. நயினார் நாகேந்திரன்

Su.tha Arivalagan
Oct 09, 2025,06:22 PM IST

திருநெல்வேலி: கரூர் செல்ல விஜய் தயக்கம் காட்டுவதற்கு, அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிய பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே சட்ட ரீதியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். விரைவில் கரூர் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் வெளியில் வராமல் இருப்பதையும் அவரது எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் விஜய்யைப் பாதித்திருக்கிறது. சதி வேலை என்று அவர் கருதுகிறார். இப்போது நாம் போனால் நம்மையும் கூட ஏதாவது செய்து விடலாம் என்று அவர் நினைக்கலாம். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூட விஜய் கருதலாம். இதனால்தான் அவர் போகாமல் இருக்கலாம் என்றார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், விஜய்யும் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் பேசியிருக்கலாம் என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.