நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
சென்னை : அக்டோபர் முதல் வாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஜூரம் இப்போதே பரவ ஆரம்பித்து விட்டது. மாவட்டங்கள் வாரியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மக்களையும், திமுகவினரையும் சந்தித்து வருகிறார். நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தற்போது மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்.
மறுபக்கம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். இடையில் செங்கோட்டையன் குறுக்கிட்டதால் சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டு டெல்லிக்குப் போய் பாஜக தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார்.
அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது முதல் பயணமே பெரும் பேசு பொருளானது. திருச்சியை குலுங்க வைத்து விட்டது விஜய்யின் முதல் பிரச்சாரக் கூட்டப் பயணம். அடுத்தடுத்து அவர் வாரந்தோறும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இந்த வரிசையில் இப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இணையவுள்ளார். சென்னையில் பாஜக உயர்மட்டக் குழு இன்று காலை நடைபெற்றது. இதில் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்டோபர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வருகிறது. பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும் பேச்சுக்கள் பாஜக.,வை பாராட்டும் வகையில் உள்ளது என அண்ணாமலை பேசி உள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், சென்னை அருகே நடைபெற்ற பாஜக மாநில சிந்தனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என பதிலளித்தார். செங்கல்பட்டு அக்கரையில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தர்ராஜன், வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நயினார் நாகேந்திரன் ஒரு நாளைக்கு 3 இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளாராம். அதில் கடைசியாக போகும் இடத்தில் பேசவும் திட்டமிட்டுள்ளாராம்.