Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் கோலாகலமான பாராட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் அவர் செய்துள்ள சாதனைகள் 100 ஆண்டுகளையும் தாண்டி நீளும். அந்த அளவுக்கு வரலாறு படைத்துள்ள இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பாராட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சிம்பொனி சிகரம் தொட்ட தமிழ் இசைஞானி இளையராஜா பொன் விழா ஆண்டு 50- என்ற தலைப்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கங்கை அமரன் உள்ளிட்ட திரைத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பாடலை இளையராஜா தனது இருக்கையில் அமர்ந்தபடி குழுவினருடன் பாடினார். அப்போது தனக்கு அருகே அமர்ந்திருந்த கமல்ஹாசனையும் கூடப் பாடுமாறு அவர் சைகை காட்ட, கமலும் இணைந்து பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து இளையராஜாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் பாடல்களை இசைக் குழுவினர் இசைத்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்த பாடல்களை இளையராஜா இசைக்குழுவினர் பாடினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தி இந்த இசை மழை அத்தனை பேரையும் நெகிழ வைத்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் பாடல்கள்தான் பெரும்பாலும் அதில் இடம் பெற்றிருந்தது.