மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Su.tha Arivalagan
Jul 31, 2026,11:04 AM IST

சென்னை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளார்.


சமீபகாலமாக மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


"தவறான தகவல்" : 




இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "3.7 லட்சம் பேருக்கு கூடுதல் மின்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப்புறம்பானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாட்ஸ்அப் தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து பொதுமக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்," என்று குற்றம்சாட்டினார்.


மேலும் தொடர்ந்த அமைச்சர், "பொறுப்பான இடத்தில் இருக்கும் தலைவர்கள் அடிப்படை ஆதாரமற்ற வாட்ஸ்அப் தகவல்களை நம்பி அறிக்கை விடுவது மக்களைக் குழப்பும் செயலாகும். அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதற்காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன," எனத் தெரிவித்தார்.


புகார் தொடர்பாக தீவிர ஆய்வு : 

மின்கட்டணத்தில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், அவை உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நுகர்வோரின் மின் பயன்பாட்டு அளவீடுகளில் தவறுகள் ஏதேனும் இருந்தால், உரிய விசாரணை நடத்தி சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். பொதுமக்கள் இதுபோன்ற தவறான மற்றும் வதந்தி பரப்பும் தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என்றும், மின்வாரியம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.