நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!

Su.tha Arivalagan
Sep 05, 2026,10:39 AM IST

- மதுரை வி. ராஜேஸ்வரி


சுற்றிச் சுழலும் உலகின் சூட்சமம் கற்றறிய

கற்பித்தலில் தெளிவும், கண்டிப்பில் அன்பும்

வார்த்தைகளில் ஊக்கமும், வழிகாட்டுதலில் முன்னோடியுமாய்

நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!


அன்பிற்கு அன்னையாய்

அறிவுரைக்கு ஆசைத் தந்தையாய்

அன்னைத் தமிழை அள்ளித்தந்து

அனுபவ அறிவை அழகாய்த்தந்து

எழுதிப் பலகையில் விரலைப் பிடித்து

எதிர்காலம் ஒளிர்ந்திட விளக்காய் நின்று

பிரம்பைப் பிடித்தாலும் பிள்ளை மனதுடன்

பாரபட்சம் பார்க்காத வெள்ளை மனதுடன்

ஏணியாய் ஏற்றிவிட்டு

தோணியாய்க் கல்விக் கரைசேர்த்து

பள்ளிப்பூங்காவின் வாசமலர்களாய்

பக்குவம் நிறைந்த பாசமலர்களாய்

பறக்கும் பட்டமாக இல்லாமல்

நம்மை உயர உயரப்

பறக்கவைக்கும் நூலாக விளங்கி

அறிவின் துளிகளை அள்ளிவந்து

அன்புமொழியால் எங்களைத் தீட்டிய ஓவியர்கள் நீங்கள்!




உங்கள் குரல்கேட்க

காத்திருந்த காலங்களும் - அதில்

கற்றறிந்த பாடங்களும் ஏராளம்!

ஏற்றத்தாழ்வு பாரா உங்கள் விழிகள் சொன்னது

'மன்னிக்க மறக்கக் கற்றுக்கொள்' என்று!

முழுநிலவைப்போல் பிரகாசிக்கும்

உங்கள் உள்ளம் சொன்னது

“ஒவ்வொரு தேடலிலும் மகிழ்கொள்' என்று!


எத்தனையோ நினைவுகள் எங்கள் கண்களின்முன்!

எங்கள் பள்ளிக்காலங்கள் தூக்கிச்சுமக்கும் உங்கள் நினைவலைகளை!

அன்போடு, அழியாத கல்விச்செல்வத்தை அள்ளிக்கொடுத்து

விடாமுயற்சி நம்பிக்கையோடு

வெற்றியென்னும் சிகரம் அடைந்திட

உறுதுணையாய் நின்று பாதை வகுத்துக்கொடுத்த

உயர்ந்த உள்ளம்கொண்ட

அனைத்து ஆசிரியர்களுக்கும்

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!


(வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை)