தாலாட்டும் நினைவுகள்!

Su.tha Arivalagan
Jan 21, 2026,11:36 AM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி 


தொட்டிலின் அசைவில் மெல்லக் கண் மூடி,

துயரங்கள் அற்ற அந்த தூக்கம்..!!


அம்மாவின் அன்பான அழகு கைகளால் ,

நிலாச்சோறு உண்ட அந்தத் தருணங்கள்..!


சின்னஞ்சிறு கையால் அம்மா சேலை பிடித்து,

சிறு நடை போட்டு ,நான் கண்ட காட்சிகள்..!


அப்பாவின் தோள்களில் ஆனந்தமாய் அமர்ந்து ,

ஊரைச் சுற்றிப் பார்த்த நினைவுகள்..!


பாட்டியின் மடியில் பகல் உறங்கம் கண்டு,

பல கதைகள் கேட்டு மகிழ்ந்த  நாட்கள்..!




பள்ளியின் தோழமை, பகிர்ந்திட்ட சிற்றுண்டி.

பட்டாம்பூச்சியாய்  பறந்து திரிந்த நாட்கள்..!


படிக்கவேவில்லை என தோழியிடம் பொய் கூறி ,

படித்து  முதல் மதிப்பெண் பெற பட்டபாடு..!


தித்திக்கும் திருவிழாக்கள் ,  தேரோட்டங்கள்,

திகட்டாத இன்பங்கள், பொன்னான நினைவுகள்..!


மழையில்  நனைந்து ஆடிய ஆட்டங்கள் , 

மறுநாள் காய்ச்சலில்  கதறிய  தருணங்கள்..!


இளமையின் நினைவுகள், இன்றும் இதமாய்,

இதயச் ஊஞ்சலில் தாலாட்டும் நினைவுகள்..!


தண்ணீரில் மிதக்கும் தாமரையின் இலைபோல்,

தனிமையில் மிதக்கும்  தாலாட்டும் நினைவுகள்..!!


கண்களில் நீர் கோர்க்கும் கார்கால இரவில்,

கணநேர மகிழ்ச்சி  தாலாட்டும்  நினைவுகளே..!!


எழுத்தாளரைத் தொடர்பு கொள்ள:  rksindira@gmail.com


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).