என் தனிமையின் பேரழகு
- கவிதா அறிவழகன்
மானிடரைத் திருத்த
இவ்வுலகில் நான்
பிறக்கவில்லை;
விலகிச் செல்லவும்
மனமில்லை.
நான் எனக்கான
பாடத்தைக் கற்றுக்கொண்டதால்
நகர்ந்து கொண்டேன்.
மௌனமாய் பேசும்
இளவேனிற் காற்றும்,
சங்கீதமாய் ஒலிக்கும்
சோலைக்குயிலின் பாட்டும்,
பொழியும் மழையின்
நடனக் கூத்தும்,
என் காயங்களுக்கு
மருந்தாக வித்திட்டன.
அந்தி சாயும்
அந்த விண்வெளியும்,
அலையடிக்கும்
ஆழ்கடலின் அமைதியும்,
மானிடர் தராத
பேரன்பையும்
மனஅமைதியையும்
எனக்குள்
விதைத்துக் கொண்டே இருக்கும்.
மனம் மாறும்
மனிதர்களைவிட,
மாறாத வானத்தின்
விசாலமும்,
கடல் சொல்லும்
கவிதையும்,
என்னை
அழகுபடுத்துகின்றன.
வீண் விவாதங்களில்
பேதங்கள் உருவாவதைவிட,
சூரியனைப் போன்று
கம்பீரமாய் நிற்பதும்,
திருப்தியடையாத
மனிதர்களைவிட,
நட்சத்திரங்களின் நடுவே
நானும் ஒரு
நட்சத்திரமாய் இருப்பதும்,
மனதிற்கு
ஆறுதலாக இருக்கிறது.
கோடிகளாய் மனிதர்கள்
கூடி வாழும்
இந்த உலகினில்,
தனிமையின் பெருவெளியில்,
இயற்கையின் மடியில்,
எனக்கான
பேரமைதியை
நான் கண்டுகொண்டேன்.
சுயமரியாதையின் மடியை...
தாயின் மடியை...
தலை சாய்த்து,
நிம்மதியாய்
உறங்குவேன்!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)