உன்னுடன் என் கடைசி இரவு!
- டிலாணி ஸ்ரீதரன்
வெளிநாட்டில் வேலை செய்யும் சில உறவுகளின் உண்மை பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.. டிலாணி ஸ்ரீதரனின் வார்த்தைகளில்...
காவலுக்கு போன மச்சான் கண்ணசந்து தூங்கயில
கட்டியவ நா போராடும் கத கேளு!
வாங்கிய கடன் இன்னும் முடியல
வட்டியு தெனோ மலயா ஒசருது,
காலையில கதவத் தொறந்தா
காசு கேட்டு கந்து வட்டிக்காரன் கண்முன்ன நிக்கிறான்,
அசிங்கமா பேசுறான் அடிக்கவும் பாயுறான்!
குடும்பத்தையே இழுக்குறான் குணங்களையும் பழிக்கிறான்,
கண்ண கசக்கி கையெடுத்து கும்பிட்டு வழி அனுப்பி வெச்சி
முந்தானையில முகத்த தொடச்சிகிட்டு,
முட்டி வந்த கண்ணீரையும் அடக்கி முடிக்கிறதுக்குள்ள வீட்டுக்காரன்,
விடியலையா இன்னும் வீட்டுக்கூலி என்னாச்சுன்னு கேக்குறான்,
விதவிதமா பொய்ய சொல்லி விளையாடுறீங்களானு திட்டுறான்,
விதின்னு சொல்லுறதா கதின்னு புலம்புறதா
யுத்தம் முடிச்சு அள்ளி முடிஞ்சு அழுகையை மறச்சி அணுங்க சிரிப்போட,
அடுப்ப மூட்டி அலுப்பு போக காட்டத்தையும் (தேநீர்) கருப்பட்டியும் எடுத்துக்கிட்டு
உள்ள வந்து உசுருகளை எழுப்பினால்,
எப்பப் பார்த்தாலும் காட்டமானு எம் மவே கேட்குறான்....
விழியில் வழிஞ்ச தண்ணிய வெரலுல தொடச்சிகிட்டு
விட்டில் பூச்சியாய் ஒளி தேடி அலையுறோமே.......
இளையவளுக்கு இனிப்பு வேணுமாம்...
மூத்தவனுக்கு முடி வெட்ட பணம் வேணுமாம்...
இது பத்தலனு பெருசுகளுக்கு வெத்தலை பாக்கு தேவையாம்!
வாய் நமநமக்குதுனு
வசனம் வேற....
பாழாப்போன வியாதிகளும் விட்டுச்சா?
விருந்தாடியா வீட்டத்தா சுத்த மறந்துச்சா!
அஞ்சாறு நாளா ஆள உருகித்தா
ஆக்கிரமிக்கிது...
பதுக்கி வச்ச பருப்பு டப்பா பணத்தையும் தேடுது....
தொட்டதெல்லாம் பணந்தான்!
துன்பத்துல வாடுது மனித மனந்தான்!
வாழ வழித் தேடியே
வலிகளையும் சுமக்கணும் ....
வரவு செலவு பாத்தே விழி பிதுங்கி முழிக்கணும்...
என்ன செய்ய ஏது செய்யனு பாட்டாத்தான்
படிக்கணும்!
பட்டபாடு மறக்க
விட்ட கொறய புடிக்க!
வெளியூருக்கு அவர அனுப்பலானா.....
பணியகத்திலோ
பதவுசா பனிரெண்டு லட்சம் கேக்குறாங்கோ
பாதிய கட்டி மீதிய வேல செஞ்சி மாசோ மாசோ கட்ட சொல்லுறாங்கோ!
பொம்பளய அனுப்புனா
போற செலவு போக
மீதியு தாரேங்கிறாங்க....
வெளிய சொன்னா வெட்கம் நெனச்சிப் பாத்தா துக்கமுனு,
விடியட்டும் நமக்கும்
நல்லதொரு காலமுனு
வீரத்த நெஞ்சில வரவச்சி
நெருடலோட
நாம்போறேன்...
நாலு பேரு மதிக்க
நம்பலயும் விரும்ப
ஏதொ கொஞ்சமாச்சும்
நெலம மாறாதாங்கிற
ஏக்கத்த சொமந்து
உங்கள எல்லாத்தையு விட்டு
உணர்வுகள் புதச்சிகிட்டு
உள்ளுக்குள்ள அழுதுகிட்டு ...
வெளியில சிரிச்சிகிட்டு
வேதனய மறச்சிகிட்டு
போறேன் நாட்ட விட்டு
பிள்ளைகள பாத்துக்கிட்டு
பக்குவமா பேசிக்கிட்டு
சண்ட கிண்ட அடிக்காம
சத்தம் கித்தம் போடாம
ஊருக்கு உத்தமனா
வம்பு வழக்காம
இரு மாமா
கண்ண மூடித்
திறந்தா வருடமும்
முடிஞ்சிரும்,
மன வருத்தமும்
வாழுவோம்
சென்மத்துக்கும்
கனவுகளை சுமந்தபடி பறக்கிறோம்
அயல்நாடு எங்கள் நனவுகளின் அனுமதியே கடவுச்சீட்டு