கடவுளின் ராஜ்ஜியம் குழந்தைகள் போன்றவர்களுக்கே!

Maitreyi Niranjana
Mar 26, 2026,04:56 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இது இயேசுபிரான் சொன்னது.. இதை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா? குழந்தை போல இருப்பதற்கும், குழந்தைத் தனமாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. சிலருடைய வயது 60 ஆக இருந்தாலும் அவர்கள் குழந்தைத்தனமாக இருக்கலாம்.. பொதுவாக முதியவர்கள் குழந்தை போல் மாறி விடுவதுண்டு என்று சொல்லப்படுவதுண்டு.. இதில் முதிர்ச்சி இருக்காது.. குழந்தைத்தனமாக எதற்கெடுத்தாலும் வீம்பு செய்து கொண்டு இன்னும் சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு கொண்டு இருப்பது குழந்தை போல் என்று சொல்ல முடியாது..


இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபோது போர் வீரர்களுக்கு சைக்காலஜிக்கல் டெஸ்ட் செய்யப்பட்டது..அப்போது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் ஆவரேஜ் மனித மனத்தின் வயது 13..  


குழந்தை போல் இருப்பது என்பது என்ன?




நாம் எல்லாரும் அறிவோம் எனர்ஜி அல்லது ஆற்றல் அதற்கு வடிவம் கிடையாது (Formless).. அந்த எனர்ஜிக்கு உருவம் கொடுக்கப்படுவது நம்மால்..நம்முடைய மனத்தினால்.. அது கோபமாக இருக்கலாம்…செக்ஸ் எனர்ஜியாக இருக்கலாம்… காதலாக இருக்கலாம்.. 


ஏதோ ஒரு சூழ்நிலையில் எனர்ஜி அதனுடைய Source ல் இருந்து கிளம்பிவிட்டால்.. ஒன்று அது வெளிப்படுத்தப்பட வேண்டும் (Expression) அல்லது அமுக்கப்பட வேண்டும்..(Supression).. 


இந்த ரெண்டு விதத்திலும் நம்முடைய கவனம் அடுத்தவர் மீது.. நம் மீது இல்லை..வெளிப்படுத்தும்போது நாம் யாரிடம் வெளிப்படுத்துகிறோமோ அவரையும், நம்மையும் பாதிக்கிறோம்.. அமுக்கி வைக்கப்படும் போது அது நமக்குள்ளே இருக்கும்.. பலர் பல வருடங்களாக.. பல ஜென்மங்களாக இதை அடக்கி வைப்பார்கள்.. அது ஒரு எரிமலையை போன்றது.. இப்போது இல்லை என்றாலும் வேறு ஏதோ சூழ்நிலையில் வெளிப்படும் அபாயம் இருக்கிறது.. அமுக்கி வைக்கப்படுவது.. தள்ளி வைக்கும்  வேலைதான் ( Postponement).. 


புத்தர் மகாவீரர் போன்ற ஞானிகள் / யோகிகள் குழந்தை போன்றவர்கள் .. குழந்தைகளுக்கு எனர்ஜி அதனுடைய இருப்பில் (Source) இருக்கும்.. உடல் வளர்ந்து பக்குவம் அடையும்போது அது வெளிப்படுத்தப்படும்.. 


இந்த எனர்ஜியை நாம் அந்த சூழ்நிலை (Mood)வரும்போது நாம் கவனிக்க ஆரம்பித்தால் அது திரும்ப  அதன் இருப்பிற்கு திரும்பிவிடும்.. நம் கோபப்பட வாய்ப்பில்லை..


இன்னும் சில ஜென் துறவிகள் தங்கள் சீடர்களுக்கு பயன்படுத்தும் ஒரு தியான முறை இது.. 


ஒரு சீடர் தியான கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்..அவர் சென்றவுடன் ஜென் தலைமை துறவி அவரை அவமதிப்பாக பேசுவார்.. அந்தக் கூட்டத்தில் இருக்கும் சில சீடர்களும் அவருடன் சேர்ந்து கொண்டு அவரை பழிப்பார்கள்.. அந்த சீடருக்கு பயங்கர கோபம் வரும்.. அப்போது அவருடைய மாஸ்டர் அவரிடம் சொல்வார் நீ இப்போது கண்ணை மூடிக்கொண்டு உன்னை கவனி என்று.. அப்போதுதான் அந்த சீடர் உணர்வார்..இது வேண்டும் என்று நடத்தப்பட்ட சூழ்நிலை என்று..


எனர்ஜி நம்முடைய இருப்பில் இருக்கும்போது நாம் குழந்தை போன்றவர்கள்.. இதைத்தான் இயேசுபிரான் சொன்ன குழந்தைகளுக்கான கடவுளின் ராஜ்யம்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா ?


காஷ்முஷ் புத்தரின் சீடனாக இருந்தார்.. புத்தர் ஞானமடைவதற்கு முன்பு.. அவர் ஒரு கடுமையான துறவி என்பதை நாம் அறிவோம்.. பல விதங்களில் தன்னை துன்புறுத்திக் கொண்டிருந்தார்.. அப்போது 

காஷ்முஷ் அவருடைய தீவிரமான சீடர்.. புத்தர் ஞானமடைந்த போது அவருடைய நடைமுறை மாறிப்போனது.. தன்னை துன்புறுத்திக் கொள்வது பைத்தியக்காரத்தனம் என்று உணர்ந்தார்..


அப்போது காஷ்முஷ் புத்தருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவருடைய வேறு சில சீடர்களுடன் சேர்ந்து விலகி வேறு ஊருக்கு சென்று விட்டார்.. புத்தர் சில நாட்கள் கழித்து தன்னுடைய சீடர்களை தேடி அந்த ஊருக்கு சென்றார்.. காஷ்முஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று சீடர்களும் பேசிக்கொண்டனர்.. புத்தர் வருகிறார் போல தெரிகிறது நாம் அவரை கண்டுகொள்ள கூடாது சாதாரண மரியாதை கூட அவருக்கு தரக்கூடாது என்று கண்மூடி அமர்ந்து கொண்டனர்.. புத்தர் அருகில் வந்தார்.. காஷ்முஷ் கண்ணில் கண்ணீருடன் புத்தரின் காலில் விழுந்தார்.. மற்ற சீடர்களும் அதே நிலை.. புத்தர் கேட்டார் என்னவாயிற்று உங்களுக்கு என்னை கண்டு கொள்ளக்கூடாது என்று தானே முடிவு எடுத்திருந்தீர்கள் என்று கேட்க..


காஷ்முஷ் சொன்னார்.. தங்கள் அருகில் வரவும் ஏதோ நடந்து விட்டது அப்படி ஒரு காந்த சக்தி எங்களை என்ன செய்து விட்டீர்கள் என்று கேட்க.. “நான் எதுவும் செய்யவில்லை.. எனக்குள்ளே நடந்த ஒரு விஷயத்தினால் என்னுடைய எனர்ஜி அதனுடைய இருப்பில் இருக்க ஆரம்பித்துவிட்டது.. அதனால் தான் உங்களுக்கு இப்படி ஆகிறது..” என்றார்..


குழந்தைகளின் நிலையும் அது தான்.. It's not by choice.. 

தன்னை உணர்ந்த மனிதனின் நிலை அதே.. ஆனால் அது அந்த மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை..It's by choice..


நன்றி..