தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
- எம்.கே. திருப்பதி
தேசத் தந்தை
தேசத்தின் விந்தை
நற்குணம்விற்ற
நாட்டுச் சந்தை!
வறியவர் உடையின்
வாட்டம் கண்டு
வாங்கினான் உடலில்
வதங்கிய கந்தை!
கம்பூன்றி நாடலைந்த
கர்ம வீரன்
அன்பூன்றி அரவணைத்த
அறத் தீரன்!
சத்தியம் ஒன்றே
நித்தியம் என
சாதித்து காட்டினான்
இம்சை என்றும்
இம்சை என்று
வாதித்து காட்டினான்!
அவன் அகராதியில்
கலவரமோ வேறு
நிலவரமோ -- முப்போதும்
வெள்ளைக்கொடி வீசிக்கிடக்கும்!
பேச்சோ வீச்சோ
பெரியோனின் நிலை
பண்பை மட்டுமே
பேசிக்கிடக்கும்!
மெலிந்த தேகன்
எனினும்
மதங்கொண்ட யானைகளை
மல்லாத்தும் பாகன்!
ஜீவகாருண்ய
சிந்தனைகளின் அகரமானவன்
புலால் இச்சை புதைத்த
புண்ணியாத்மாக்களின்
முதல் மாணவன்!
நாட்டை நடத்தியவன்
ராட்டை நூற்றான்
கோட்டை புறந்தள்ளி
குடிசை ஏற்றான்!
கருத்துக் கன்னன்
காலம் கழிந்ததென
காலனும் அழைத்தது
நேட்டால் காங்கிரஸ்
நிறுவியவனை
தோட்டா துளைத்தது!
மகானே நீ...
மீண்டும் வா!
மதுவின் தீமை
பொதுவில் ஓது!
மாதுக்கு மாநிலத்தில்
பாதுகாப்பு ஏது?
உன் கோவணத் துணியாய்
சுருங்கிப் போனது சட்டம்!
உன்
தோற்றப்பொலிவை
தொலைத்த தேசம்
நாற்றம் எடுக்கிறது!
உன் பொக்கைவாய்
சிரிப்பு மட்டுமே
தண்ணீர் தூண்டிலின்
தக்கையாய் மிதக்கிறது!
மீண்டும்
அறங்கேற்று! வீசட்டும்
அவனி எங்கும் உன்
அறக்காற்று!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)