RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

Su.tha Arivalagan
Jul 11, 2026,09:56 PM IST

-எம்.கே.திருப்பதி, திருப்பூர்


இசைத்தூளி

இறந்து விட்டதா? 

தென்னக நைட்டிங்கேல் 

தென்புலம் சென்றதா?


அறுபது ஆண்டுகள் 

ஆராட்டிய நீ 

இன்று மட்டும்

ஏன் எங்களை

அரற்றிச் சென்றாய்?


செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே நீ 

நெடுந்தூரம் சென்றாயோ!


பொத்தி வச்ச 

மல்லிகை மொட்டு

நெஞ்சில் 

குத்திவிட்டதே!




தென்றலாய் வந்து

தீண்டிய நீ  

கொண்டலோடு 

கலந்து விட்டாயே!


கண்ணே கலைமானே

நீ

சங்கீத சிலைதானே!


உன் கீதம் கேட்காமல் 

என் தேகம் தூங்காது


இசைவாணியே 

எது உன்

மூச்சை நிறுத்தியது?


முதுமையா

அல்ல

கொடிய நோயா

அல்ல

உன் கொடுப்பினையா...?


நீ 

பூமித் தாயை 

புகழ்ந்தது போதுமென

உன் இசைத்தாய் 

உன்னை உம்பருலகுக்கு

கடத்திச் சென்றாளோ!


இல்லை..

நீதான் என் 

இசை மகளென

இசைந்து உனை 

அழைத்துச் சென்றாளோ!


நேர்ந்தது எதுவாயினும்

சோர்ந்தது யாம்!


குண்டூரில் மலர்ந்த நீ 

மைசூரில் மறைந்திருக்கிறாய்!


இன்றும் என்றும் 

குண்டூர் காரம்போல் 

உன் சுவை இருக்கும்


மைசூர் சந்தனம் போல் 

உன் வாசம் மணக்கும்!


இசை வானுக்கு

இந்த

இசைப் பித்தனின்

இறுதி வணக்கம்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)