சிந்திப்போம்.. எப்போதும் நல்லதாகவே அது இருக்கட்டும்!

Su.tha Arivalagan
Feb 23, 2026,11:54 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed,B.A (Hindi)


சிந்தித்து செயல்பட்டு வாழ்வில் முன்னேறுவோம், எண்ணம் போல் வாழ்க்கை என்ற வரிகளை அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருப்போம்.


எண்ணம் என்பது நாம் சிந்தித்துக் கொண்டிருப்பது தான். நம் சிந்தனைகள் நல்லதாகவே இருக்க வேண்டும்.


நல்ல சிந்தனை நம் வாழ்க்கையை உயர்த்தும். இப்படி மகிழ்ச்சியாக வாழ  நாம் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவோம்.


நேற்றுதான் உலக சிந்தனை நாள் World Thinking Day கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நிமிடமும்  சிந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம் .


1926ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச கேர்ல் கைட்ஸ் மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சிறுமிகள் ஒரே நாளில் ஒருவரை ஒருவர் நினைத்து, அவர்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நாள் தொடங்கப்பட்டது.


இந்த நாள், ஸ்கவுட் இயக்கத்தின் நிறுவனர் Robert Baden-Powell மற்றும் அவருடைய மனைவி, உலக தலைமை கேர்ல் கைட்ஸ் தலைவர் Olave Baden-Powell இவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 22 அன்று கொண்டாடப்படுகிறது.




உலக சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்கவும், சமூக பொறுப்புணர்வை உருவாக்கவும், தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  

ஒவ்வொரு ஆண்டும் உலக சிந்தனை நாளுக்காக ஒரு புதிய கருப்பொருள் அறிவிக்கப்படுகிறது. அந்த கருப்பொருள் உலக பிரச்சினைகள், சுற்றுச்சூழல், பெண்கள் உரிமைகள், கல்வி, சமத்துவம் போன்ற சமூக முக்கியத்துவமான தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.


இந்த கருப்பொருளின் மூலம் உலகம் முழுவதும் உள்ள கேர்ல் கைட்ஸ் உறுப்பினர்கள் ஒரே கருத்தை மையமாக கொண்டு செயல்படுத்துவார்கள். இது அவர்களின் சிந்தனையை உலகளாவிய கோணத்தில் மாற்றும். ஒவ்வொருவரும் தனது சிந்தனையை நல்ல விதமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப நாம் யார் சொல்வதையும் அப்படி கேட்காமல் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.


அப்துல் கலாம் ஐயாவின் கனவு காணுங்கள் என்ற வரிக்கு ஏற்ப தனது குழந்தைகளை இளம் வயதில் இருந்தே நல்ல சிந்தனை செய்யக்கூடியவர்களாக வளர்க்க வேண்டும்.


எப்பொழுதும் நேர்மறையாக பேச வேண்டும். எந்த செயலை செய்யும் பொழுதும் நேர்மறையாக எண்ண வேண்டும் .


உன்னால் முடியும் என்ற வரிக்கு உயிரூட்டும் விதமாக நாம் அனைவரும் நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்து காட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)