சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

Su.tha Arivalagan
Sep 15, 2026,10:22 AM IST

- அ.தாமஸ்


நல்லவர்களாக இருங்கள். நல்லவர்களாக மட்டுமே இருப்பதால் எந்த ஒன்றும் உங்களுக்கு எளிதாகக் கிடைத்து விடப் போவதில்லை. நல்லவர்களாக இருக்கும் அதே வேளையில் எந்த ஒன்றை எப்படி அணுக வேண்டும் என்பதிலும் தெளிவான நற்சிந்தனையோடு இருங்கள். ஏனெனில் உங்களின் இளகிய இதயத்தை உங்களின் எண்ணமே வலுப்படுத்துகிறது.


எந்நிலையிலும் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில் ஏமாற்றப்படும் பலபேர் நல்லவர்களே; அதே நேரத்தில் ஏமாற்றும்  அனைவரும் நல்லவர்கள் என்பதை அப்படியே ஏற்கும் அணுகுமுறையை முற்றாய் மாற்றுங்கள்.




உண்மையாய் உதவி வேண்டுபவர்களுக்கு உள்ளன்போடு உதவுங்கள். ஏனெனில் உதவி வேண்டும் அனைவரும் உண்மையானவர்கள் அல்ல; அவர்களில் தான் பல போலிகள் பகட்டாய்ப் பவனி வருகிறார்கள். எனவே, உதவுவதிலும் கூட எச்சரிக்கையோடு இருங்கள்.


நல்லவர்களின் அன்பு உதாசீனப்படுத்தப்படும் பல இடங்களில் போலிகளின் அன்பு பெருமைப் படுத்தப்படுகிறது. நல்லவர்கள் எங்கே தவறுகிறார்கள்?  வெளிப்படுத்தும் இடத்திலா? இல்லை வெளிப்படுத்தும் விதத்திலா? தெரியவில்லை. எனவே, அன்பின் தேடலில் இருப்பவர்களை மட்டுமே தேர்ந்து தெளியுங்கள் உங்களின் அன்பை.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)