காலம் எனும் மரம்!
- பா.பானுமதி
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
காலத்தால் முற்பட்ட கர்மா
தலைமுறைகளை தாண்டி வேர்கள்
விலை மதிப்பிலா விருட்சத்தில் விளையாடுகிறது
ஆணிவேரும் சல்லி வேரும் அணி திரண்டு அளிக்கும் கூட்டமே
தண்டின் வரம் ஆகிறது
வறண்ட போதும் வேர்கள் வளைந்து சென்று
வேலை பார்த்தாலே தண்டு தலை நிமிரும்
முன்னோராகிய வேர்கள் முடிச்சுகளில் நைட்ரஜன் இல்லாவிட்டால்
மண்மேல் இருக்கும் தண்டு வாடும்
தண்டும் தன்னம்பிக்கையுடன் இல்லாவிட்டால்
கிளையோ இலையோ வாழ்வது ஏது
தண்டு தரமாக வாழ்க்கை நல் அறமாக கொண்டு போனாலே
தழைக்கும்
தண்டு மட்டும் தளர்ந்து விட்டால்
பின்பு மரம் எப்படி பிழைக்கும்
எண்ணற்ற கலைகள் எத்தனையோ வடிவம் கொண்டிருக்கும்
சிறிதாக பெரிதாக
நீண்டதாக குட்டையாக அடியில் குடி இருப்பவரை கொண்டு
அதன் அமைப்பு அமையும்
இலைகளும் பல வண்ணங்களில்
பார்வையை கவரும் என்றாலும்
பறிப்பவரின் கரம் பொறுத்து
வண்ணங்கள் பரிமாறப்படும்
காய்கள் வகை வகையாய்
வசீகரமாய் வடிவங்கள் கொண்டு அமையும்
ஆனால்
கொய்பவரின் எண்ணம் போல்
காய்கள் கிடைத்து விடாது
சில போது கல்லால் அடித்து
பல போது மரத்தின் மேல் ஏறி கீழே விழுந்தாலும்
காய் கிடைக்காமல் காயம் கிடைக்கும்
கால் முறிந்து கை வளைந்தும்
காய் கிடைக்காமல் போகும்
கேட்டதெல்லாம் கொடுத்து விடாதே
கொடுப்பினை இருந்தாலே
இல்லாவிட்டால் படிப்பினை நல்கி
பல தத்துவங்கள் பேசும் பாரமாக தெரியும்
கனிகளின் தன்மையோ இன்னும் ரசமானது
அறுசுவையை தாண்டி பல சுவைகளில் இருப்பது
என்ன சுவை வேண்டி பழம் பறித்தாலும்
அந்த சுவை கிடைத்து விடுமா என்றால்
அதுவும் சொல்லிவிட முடியாது
கேட்ட சுவையும் கிடைக்கலாம்
கேளாத பிடிக்காத சுவையும் கிடைத்து படுத்தலாம்
எந்த சுவை என்றாலும் ஏற்கத்தான் வேண்டும்
முகம் சுளித்தாலும் அகம்பாடினாலும் எதுவும் மாறாது
சுவையின் தன்மைகளை உணர்ந்து
சிறப்பென சிந்தித்து பொறுப்பாய் என்றால்
சில நேரம் பசி ஆறலாம்
நினைத்த சுவை கிடைக்காமல்
கிடைத்த சுவை பிடிக்காமல்
காலத்திற்கும் இயங்கினால் பசி ஏறலாம்
முறிந்த கிளைகள்
இலைகள் பூக்கள் காய்கள்
கனிகளை எண்ணிக் கொண்டிருந்தால்
அவை சுற்றி சுற்றி அடிக்கும் சுனாமியாய் வெடிக்கும்
பற்றி இருக்கும் தற்போதுள்ள மரத்தை நட்பாய் பாவித்தால்
ஆற்றியும் இருக்கலாம் தேற்றியும் முடிக்கலாம்
எதிர்காலத்தில் மரமானது கிளைபரப்பி
நம் தலைமுறைக்கு நிழல் கொடுக்கும் என்றால்
காற்றில் பறக்கும் பலூன் போல
நினைவுகள் நிஜமாகாது கற்பனைகள் கை கொடுக்காது
புயலுக்கு விழுவதும் வெயிலுக்கு வாடுவதும்
மழையில் குளிர்வதும் காலம் மரத்திற்கு கைவந்த கலை
மனிதன் இறைஞ்சுனாலும் இரைந்தாலும்
காலத்தின் மனம் கரையாது கல் மனம்
சிலருக்கு காலம் கை கொடுக்கும்
பலருக்கு கைப்பிடித்து இழுக்கும்
எது எப்படி என்றாலும்
காலம் மரத்தின் கைகளில் நாம் வாழ்க்கை
கடவுள் கருணை கொண்டால் காலம் மரம் கற்பக விருட்சமாகும்
கடவுளையும் மீறி நம் கர்மா வென்றால்
காலம் முள்மரமாய் மாறும்
கர்மா என்பதன் காலத்தால் அமையும் நம் நடத்தை விதிகளே
நடத்தை நலமானால் நாட்கள் வளமாகும்
எதிர்காலம் பலமாகும்