உலக பூமி தினம் – குழந்தைகளுடன் கைவினை மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

Su.tha Arivalagan
Apr 22, 2026,01:01 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி Earth Day உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. 


சுற்றுச்சூழலை காப்பது பெரியவர்கள் மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கும் இந்த பொறுப்பை கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.




இந்த நாளை முன்னிட்டு வீட்டிலேயே குழந்தைகளுடன் சேர்ந்து சில சின்னச்சின்ன கைவினைப் பணிகளைசெய்து அவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையை வளர்க்கலாம்.


முதலில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பேப்பரில் அழகான கிரவுன் (Crown) ஒன்றை தயாரித்து, அதை அவர்கள் தலைக்கு அணிவித்து “பூமியை பாதுகாப்போம்” என்ற செய்தியை விளக்கினோம். இது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு போல இருந்தாலும், பூமியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தது.




அடுத்து குழந்தைகளின் கை அச்சு (Hand Print) கொண்டு ஒரு அழகான கைவினை உருவாக்கப்பட்டது. வண்ணங்கள் பயன்படுத்தி குழந்தைகளின் கை அச்சுகளை பேப்பரில் பதித்து, அதனை பூமியை பாதுகாக்கும் கைகளாக கற்பனை செய்து உருவாக்கினோம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயலாக அமைந்தது.


மேலும் இலை வடிவில் பேப்பர் வெட்டி அதிலும் கை அச்சுகளை பதித்து மரம் மற்றும் இயற்கையை நினைவூட்டும் ஒரு சிறிய கைவினையும் செய்யப்பட்டது. “மரம் நடுவோம், இயற்கையை காப்போம்” என்ற கருத்தை குழந்தைகளுக்கு விளக்க இந்த செயல் உதவியது.




இந்த மாதிரியான சின்ன கைவினைப் பணிகள் மூலம் குழந்தைகள் விளையாடிக்கொண்டே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். பூமி நமக்கு வாழ்க்கையை தரும் ஒரே இல்லம் என்பதால், அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை இளம் தலைமுறையினருக்கு சொல்லித் தருவது மிகவும் முக்கியம்.




பூமியை நேசிப்போம்… இயற்கையை காப்போம்… நம் எதிர்காலத்தை பாதுகாப்போம்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)