இருபத்தைந்து அகவையில்.. பருந்தாய் பறக்கும்.. பணம் தேடி மனம்.. ஆண்கள் தினம்

Su.tha Arivalagan
Nov 19, 2025,02:25 PM IST

- எம் கே திருப்பதி, திருப்பூர்


பெண்மை தெய்வமாக்கி 

தொன்மை பேசும் உலகில்

ஆடவன் அறத்தன்மை 

நாடவும் ஆளில்லை 


இல்லத்து தர்மம் 

வல்லி இயற்றலாம் 

குடியின் சுமையை 

மடியில் தாங்குவரா?


இருபத்தைந்து அகவையில்

பருந்தாய்  பறக்கும்

பணம் தேடி மனம்....


எழுபதை எட்டியும்  

 விழுவதில்லை வேட்கை 




வீதி வீதியாய் 

விரட்டும் வாழ்க்கை 


விழுந்துவிட்டால் 

பிரிவிட்ட கயிறாய் 

நெறி கெட்டுப் போகும் 


நாயகன் இல்லா 

நற்குடி

காவலன் இல்லா

மணிமுடி!


இரை தேடி 

இல் கொள்ளும்

குறை இல்லா குடும்பனுக்கு 

வக்கனையாய் நாலு வகை 

தக்கணமே தாளித்து வை 


தன் நலம் பேணா

தகவனுக்கு

முன்பின் முரண்படாமல்

அன்பின் ஈரம் பிசைந்து 

கண்ணில் காதல் காட்டு


அவனுக்கு

பிள்ளையே உலகம் 

இல்லமே மனைவி!


அவன் 

சல்லையே இல்லாமல்

வெள்ளையாய் வாழட்டும்!


(இன்று ஆண்கள் தினம்)


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)