தாவர சக்தி தினமா இன்னிக்கு?.. அப்படின்னா என்னன்னு தெரியுமா!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
தாவர சக்தி தினமா? வாங்க தெரிந்து கொள்வோம்.
தாவர சக்தி தினம் (Plant Power Day) என்பது தாவர அடிப்படையிலான உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக கொண்டாடப்படும் ஒரு சிறப்பு தினமாகும். இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் தாவர உணவுகளின் நன்மைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
காய்கறி, பழம், தானியம் போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு வகைகளாகும். அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவில் அதிகமான சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தாவர உணவுகள் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இயற்கையாக விளைந்த காய்கறி பழங்களை உண்டு ஆதிகால மனிதர்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள்.
இன்றோ நாம் செயற்கையாக உரங்களை தெளித்தும்,பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும் பயிர்களை உற்பத்தி செய்து அவற்றின் இயற்கை சத்துக்களை பெறாமல் இருக்கிறோம்.
கீரைகள் மற்றும் பழங்களை வீணாப் போகாமல் இருப்பதற்காக அவற்றின் மீது ஸ்ப்ரே அடித்து விற்பது வேதனைக்குரிய செயலாக இருக்கிறது.
இயற்கையாக மரத்திலிருந்து பழுக்க கூடிய பழங்களை சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுது காய்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக அவற்றின் மீதும் ஸ்ப்ரே அடிப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.
தாவர உணவு இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது என்பதை உணர்ந்து தாவரங்களை அதிகமாக வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் தங்களால் முடிந்த அளவு மரம் செடி கொடிகளை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டமாற்று முறையினை நாம் பின்பற்ற முயற்சி செய்வோம்.
ஒருவர் வீட்டில் விளையும் காய்கறி,பழங்களை மற்றவரிடம் கொடுத்து அவர்கள் வீட்டில் விளையும் காய்கறி,பழங்களை பண்ட மாற்றிக் கொள்வோம். நம்மைப் போன்ற குழந்தைகளுக்கும் தாவரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம்.