சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம் இன்று!
- ஸ்வர்ணலட்சுமி
சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம்: விசுவாவசு வருடம். 20 25 நவம்பர் மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை, கார்த்திகை 10 ஆம் தேதி. வளர்பிறை சஷ்டியும் திருவோண நட்சத்திரம் அமைந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும்.
சஷ்டி திதி:
வளர்பிறை சஷ்டி திதி இன்று இரவு 10: 27 மணி வரை பின்பு சப்தமி திதி வருகிறது.
திருவோண நட்சத்திரம் : இன்று இரவு திருவோண நட்சத்திரம் 10 :42 மணி வரை உள்ளது பின்பு அவிட்டம் வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாச்சலநாயகர் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருகிறாள். பழனியில் ஸ்ரீ ஆண்டவர் பவனி வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு இன்று நடைபெறுகிறது. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
மேலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருவோண விரதம் பெருமாளுக்கு உரிய மிகவும் உன்னதமான விரதங்களில் ஒன்றாகும். இந்த நாட்களில் விரதம் இருப்பதனால் பகவானின் பரிபூரண அருளை பெற முடியும். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் விரதம் இதுவாகும். இது ஏகாதசி விரதத்தை போன்றே சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நிறைவு செய்யும் விரதம் ஆகும்.இந்த விரதத்தினை கடைப்பிடிப்பதனால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைப்பதோடு வாழ்வில் அனைத்து வளங்களும் விரும்பியபடி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மன அமைதி, செல்வ வளம், மகிழ்ச்சி, நிம்மதி, புகழ், பண வரவு உள்ளிட்ட நலன்களும் பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடையவும் இந்த விரதம் இருப்பது சிறப்பு. அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு உரிய ஸ்லோகங்களை படிப்பதும் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் சிறப்பு. பெருமாள் வாமன அவதாரம் எடுத்ததும், லட்சுமி தேவி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும் திருவோண நட்சத்திர நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
இவ்விரதத்தை முறையே கடைப்பிடிப்பதால் மிகப்பெரிய பாவங்கள் நீங்கி,நன்மதிப்பு மற்றும் ஆன்மிக எழுச்சி உண்டாகும். திருப்பதி ஏழுமலையான் ஆசிகள் கிடைக்கும். வெங்கடேச பெருமாளுக்கு நைவேத்தியமாக பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் சமைத்து படைய லிட்டு வழிபாடு முடிந்த பிறகு விரதத்தை முடிப்பது சிறப்பு.
இன்று ஹயக்ரீவருக்கு வழிபாடுகள் செய்வது உகந்த நாள்.
இன்று கரிநாள்- ஆகையால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை மாதம் அமைந்துள்ள வளர்பிறை சஷ்டி விரதம் இன்று:
முருக பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு வெற்றிலை தீபம் ஏற்றி, முருகப்பெருமானுக்கு உரிய பாடல்கள் கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, குமாரஸ்தவம், வேல்மாறல், திருப்புகழ் படிப்பது சிறப்பு. இந்த நாள் விரதம் மேற்கொள்வதனால் முருகப்பெருமானின் அருளும், பெருமாளின் அருளும், கார்த்திகை மாதம் மாலை அணிந்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும், சிறப்பான நாள் ஆகும்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.