முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
- ஸ்வர்ணலட்சுமி
தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம் ஆகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய நட்சத்திரம் ஆகும்.. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்று கூறப்படுகிறது. இந்த புனித நாள்" சோதி நாள் " எனவும் அழைக்கப்படுகிறது.
உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து திருவிளையாடலாய் ஆறு குழந்தைகளை நெருப்பாக இந்நாளில் படைத்தார். அந்த ஆறு குழந்தைகள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்கள். பார்வதி தேவியின் அணைப்பால் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி முருகன் என்று அழைக்கப்பட்டார். மக்கள் விலங்குகள் தாவரங்கள் எல்லாம் ஓருயிராக இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்த வைகாசி விசாகத்தின் கருத்தாகும்.
புத்த பெருமான் பிறந்ததும்,ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளில் நம்மாழ்வாரும் பிறந்தார் என்று கூறப்படுகிறது.
வைகாசி விசாகமும் காவடியும்:
இந்த நாள் முருகப்பெருமானின் அருளை பெற பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி- பால் காவடி,புஷ்ப காவடி, மயில் காவடி,பன்னீர் காவடிகளை சுமந்து சென்று தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நாள் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அருகில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், காவடி ஊர்வலங்களும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.
முருகப்பெருமானின் திருவருளை பெறுவதற்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவும் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர். பால்குடம், காவடிகளை ஏந்தி கந்தனின் அருளைப் பெற முருகப்பெருமான் கோவில்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள்.
காவடியின் வகைகள்:
புஷ்பகாவடி :
இந்த காவடி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து, 'அரோகரா 'என கோஷமிட்டு முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக எடுக்கப்படுகிறது.
பால் காவடி :
காவடியின் இருபுறமும் பால் குடங்களை தொங்கவிட்டு பாதயாத்திரை யாக முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்வார்கள்.
மயில் காவடி:
முருகப்பெருமானின் வாகனம் மயில். முருக பக்தர்கள் காவடியை மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, முருகனை மனதார நினைத்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
பன்னீர் காவடி :
பன்னீர் நிரப்பிய குவளைகளை இரு முனைகளிலும் கட்டி எடுத்து வருவது.மன அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்காக இந்த காவடி எடுக்கப்படுகிறது.
சந்தன காவடி:
சந்தனம் சுமந்து செல்வது.தீராத நோய்கள் நீங்குவதற்காக இந்த சந்தன காவடி எடுக்கப்படுகிறது.
இளநீர் காவடி:
காவடியில் இளநீர் கட்டி எடுத்துச் செல்வது. சரும நோய்கள் நீங்க வேண்டிக் கொள்ளப்படுகிறது.
அன்னக்காவடி :
உணவுப் பொருட்களை சுமந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்துவது. இந்த காவடி எடுத்துச் செல்வதனால் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் காவடியாட்டம் முருக வழிபாட்டின் முக்கியத்துவமாக இடம்பெறுகிறது.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்பிரமணி.