செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்.. அதற்கு சிறந்த ஊடகம் எது தெரியுமா?

Su.tha Arivalagan
Feb 13, 2026,01:58 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

செல்வத்துள் எல்லாம் தலை என்ற திருக்குறளை சிறப்பிக்க இன்றைய தினத்தை கொண்டாடுவோம்.


செவிச்செல்வத்திற்கு சிறந்த சமூக ஊடகம் எது தெரியுமா?


மின்காந்த அலைகள் மூலம் செய்திகள், பாடல்கள் மற்றும் தகவல்களை கம்பியில்லாத் தொழில்நுட்பம்  மூலம் வழங்கி வரும் வானொலி (Radio) தான் .


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் (World Radio Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளை 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் அறிவித்தது.  பிப்ரவரி 13 ,1946 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் வானொலி சேவை முதன் முதலாக தொடங்கப்பட்டது.


இந்தியாவில் “ஆகாசவாணி” (All India Radio) மிகவும் புகழ் பெற்ற வானொலி நிறுவனமாகும் . இது பல மொழிகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி வந்தது .


 


மின்சாரம் இல்லாமல் இருக்கும் போதும் பேட்டரி மூலம் வானொலியை கேட்க முடியும். எனவே கிராமத்தில் வாழும் மக்கள், மீன்பிடி தொழிலை செய்யும் மீனவர்கள், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் வீடுகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் வானொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


வானொலி மூலம் கல்வி  சார்ந்த நிகழ்வுகள் , விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான  அறிவுரைகள், மக்கள் அனைவரும் நல்ல சுகாதாரத்துடன்  வாழ்வதற்கு சுகாதாரம் சார்ந்த தகவல்களையும் வழங்கி வந்தன.


பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டிய செய்திகள் மற்றும் பொதுமக்கள் பெற வேண்டிய விழிப்புணர்வுகளையும் வானொலி மூலம் வழங்கி வந்தார்கள்.


வானொலி மூலம்  சினிமா பாடல்கள், நாட்டுப்புற கலைகள் , நாடகங்கள் மற்றும் பலதரப்பட்ட விளம்பரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடிந்தது.


மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பொது மக்களுக்கு வானொலி மூலம் தகவல்களை வழங்குகின்றன.மேலும் அவற்றிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துகின்றன. அவசர காலப் பேரிடர்களில் மின்சாரம் இல்லாத பொழுதும் வானொலியின் பங்கு மிகவும் முக்கியமாக பயன்படுகிறது .


இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும்  வானொலியின் முக்கியத்துவம் குறையவில்லை. என்ன தான் டிவி, லேப்டாப், ஐபோன் என நவீனமாக மாறி வந்தாலும் வானொலி மூலம் பாடல்களையும், செய்திகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


நிறைய நிகழ்வுகள் FM-யில் ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வானொலி இல்லை என்று கவலை வேண்டாம். நமது கைப்பேசியிலும் Fm-களை கேட்டு மகிழலாம் .


வானொலி பயன்படுத்திய காலங்களில் அதிக நபர்கள் கண் கண்ணாடியை பயன்படுத்தவில்லை. ஆனால், இன்றோ சிறு குழந்தைகள் கண் கண்ணாடியை பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியை அருகில் பார்ப்பது ஆகும்.


இன்றைய வானொலி தினத்தில் வானொலியில் ஒலிபரப்பும் பல்வேறு நிகழ்வுகளை கேட்டு மகிழ்வோம். தொலைக்காட்சி பார்ப்பதை விட வானொலி கேட்பது சிறந்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)