மனிதர்களுக்கு மட்டும்தானா.. வனவிலங்குகளுக்கும் சிறப்பு தினம் இருக்கே!
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed, B.A (Hindi)
மனிதர்களுக்கு ஒவ்வொரு சிறப்பு தினத்தை கொண்டாடிய நாம் இன்று வனவிலங்குகளுக்காக தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.
வனவிலங்குகளுக்கு சிறப்பு தினமா?
உலக வனவிலங்கு தினம் (World Wildlife Day)
உலக வனவிலங்கு தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதின் அவசியத்தை நினைவூட்டும் முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக வனவிலங்கு தினம், United Nations (ஐக்கிய நாடுகள் சபை) அமைப்பின் பொதுச்சபையால் 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த தினம் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) ஒப்பந்தம் கையெழுத்தான நாளை நினைவுகூரும் வகையில் மார்ச் 3 அன்று நிர்ணயிக்கப்பட்டது.
அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதற்காக இந்நாளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மனிதர்களுக்கு இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சட்டவிரோதமாக விலங்கு வேட்டையாடலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காடுகள், ஆறுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்கள் சமநிலையை காக்க உதவுகின்றன. தேனீக்கள் போன்ற சிறிய உயிரினங்கள் கூட விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புலி, யானை போன்ற விலங்குகள் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கின்றன. விலங்குகள் இல்லாமல் மனித வாழ்க்கை முழுமையடையாது என்பதை ஒவ்வொரு மக்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. National Tiger Conservation Authority போன்ற அமைப்புகள் புலி பாதுகாப்பிற்காக செயல்படுகின்றன. மேலும் World Wide Fund for Nature (WWF) போன்ற சர்வதேச அமைப்புகளும் இயற்கை மற்றும் விலங்குகளை காப்பாற்ற செயல்படுகின்றன.
நாம் இன்றைய நாளில் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் :
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டேன்.
மரங்களை நட்டு வளர்த்து பாதுகாப்பேன்.
சட்டவிரோதமாக விலங்கு பொருட்கள் வாங்காமல் இருப்பேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.
இயற்கை வளங்களையும் வனவிலங்குகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்வேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது.
வனங்களை காப்போம்! வாழ்க்கையை பாதுகாப்போம்! என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)