மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
- ஸ்வர்ணலட்சுமி
Good Friday.. அதாவது புனித வெள்ளி தினம் இன்று.
2026 ஆம் ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி (Good Friday) என்பது ஈஸ்டர்(Easter) ஞாயிற்றுக்கிழமைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனுசரிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்து மனித குலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு கல்வாரியில் உயிர் நீத்த தியாகத்தை நினைவு கூறும் நாளே புனித வெள்ளி ஆகும். இது துக்க நாளாகவும், ஆழ்ந்த சிந்தனைக்கும், நோன்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுக்கும் உரிய நாளாக ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளைக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் புனித வெள்ளி என அழைக்கப்பட காரணம் இயேசு பாவங்களை நீக்குவதற்காக தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு உயர்நீத்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள்.இந்த வெள்ளி எல்லா வருடமும் ஒரே திகதியில் மற்றைய நாட்களைப் போன்று வராது. இது வசந்த காலத்தில் முதல் முழு நிலவற்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
தவக்காலம் :
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் நாள் முழுவதும் நோன்பையும், தவத்தையும் புனித வெள்ளி அன்று கடைப்பிடிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
இயேசுவின் சீடரான யூதாஸ் என்பவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவை கைது செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் யூதாஸ் இயேசு கிறிஸ்துவை பற்றிய தகவல் வீரர்களுக்கு தெரிவிக்க 30 வெள்ளி நாணயங்களை வாங்கிக் கொண்டு காட்டி கொடுத்தார். இதனால் ஜெருசலேம் காவலர்களால் இயேசு கைது செய்யப்பட்டார்.
இயேசுவிற்கு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கல்வாரி மலையில் குன்றின் மேல் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள். காவலர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை.
புனித வெள்ளி (Good Friday) முக்கியத்துவம்:
இயேசு சிலுவையில் அனுபவித்த கடும் துன்பங்களை கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து, இந்த நாளை துக்க நாளாக அனுசரிக்கின்றனர். இயேசுவின் மரணம் என்பது துயரமான நிகழ்வாக இருந்தாலும், அது மனித குலத்திற்கு மீட்பை அளித்ததால் இந்த நாள் "புனித "அல்லது "நல்ல" வெள்ளி அதாவது குட் ஃப்ரைடே( Good Friday) என்று அழைக்கப்படுகிறது.
இயேசுவின் தியாகம் மற்றும் மீட்பு:
இயேசு கிறிஸ்து மனித குலத்தின் பாவங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மன்னிப்பு மற்றும் நித்திய அமைதியை வழங்கிய தியாக நாளாக இந்த 'புனித வெள்ளி' கருதப்படுகிறது.
தேவாலயங்களில் வழிபாடுகள்:
தேவாலயங்களில் புனித வெள்ளி அன்று சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவைப்பாதை மற்றும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இயேசுவின் பாடுகளை நினைவு கூரும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு உயிர்த்தெழுந்து மரணத்தை வென்றதை பறைசாற்றும் முன், அவரது தியாகத்தை உணர்த்தும் நாளாக புனித வெள்ளி அமைகிறது.
மன்னிப்பு:
இயேசு தமக்காக வாழாமல்,மனிதர்களின் பாவங்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்.சிலுவையில் தொங்கியபடியே தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும்மனிதர்களின் பாவங்களுக்காகவும் மன்னிப்பு வேண்டினார். இயேசுவின் சிலுவை மரணம் மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டு இறைவனுடன் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்திய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. மரணம் இறுதியானது அல்ல அது ஒரு புதிய வாழ்வின் தொடக்கம் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. இந்த நாளில் இயேசுவின் போதனைகளை நினைவுகூர்ந்து அன்பு, கருணை,மன்னிப்பு போன்றவற்றை வலியுறுத்துகின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை 'புனித வெள்ளி 'ஆகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை 'ஈஸ்டர்' தினமாகவும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.