அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Sep 27, 2025,10:37 AM IST

சென்னை: பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.


டிடிவி தினகரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த  இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. 


தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  


அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. 


எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி,  மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.