காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?

Su.tha Arivalagan
May 25, 2026,05:01 PM IST

சென்னை : தற்போது தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகள் காலியாகவுள்ளன. அதோடு விரைவில் ஒரு ராஜ்யசபா பதவிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட்டு, இவற்றை தவெக கைப்பற்றும் பட்சத்தில் அக்கட்சியின் பலம் மேலும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.


தமிழக சட்டசபையில் உள்ள 234 உறுப்பினர்களுக்கான இடங்களில், ஏற்கனவே முதல்வர் விஜய் தான் போட்டியிட்டு வென்ற இரண்டு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து விட்டது. 


இந்நிலையில் இன்று, அதிமுக.,வை சேர்ந்த 3 எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்துள்ளனர். இதனால் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய நான்கு தொகுதிகளும் காலியாகப் போகின்றன.


ராஜ்யசபா தேர்தல் :




மற்றொரு புறம், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அதிமுக.,வின் சி.வி.சண்முகம், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஏற்கனவே தான் வகித்த எம்.பி., பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனால் அந்த இடமும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 


காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து விட்டது.  இந்த இடைத் தேர்தலில் தவெக வெல்லும் வாய்பபு பிரகாசமாக உள்ளது. தவெக போட்டியிட்டால் அக்கட்சிக்கு முதல் எம்.பி பதவி கிடைக்கும்.


தவெக.,விற்கு ஜாக்பாட் :


தற்போது காலியாக உள்ள 4 எம்எல்ஏ., 1 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக போட்டியிட்டு வெற்றி பெற்றால், தேசிய அரசியலிலும் தவெக நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.


4 எம்எல்ஏ.,க்களுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், தமிழக சட்டசபையில் தவெகவின் பலம் தற்போதுள்ள 107 எம்எல்ஏ.,க்களுடன் சேர்ந்து (107+4=111) ஆக அதிகரிக்கும். அதோடு 1 ராஜ்யசபா இடத்தையும் கைப்பற்றினால் பார்லிமென்டிற்குள்ளும் நுழையும் வாய்ப்பை தவெக பெறும்.