விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
சென்னை: தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம். வரும் 27ம் தேதி சேலத்திற்கு பதில் கரூரில் மக்களை சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 13ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திருச்சி மற்றும் அரியலூர் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 20ம் தேதி சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து, மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். என்னங்க பெரிய பணம். அரசியலுக்கு வந்துதான் பணத்தை சம்பாதிக்கனுமா என்ன. உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேற வேலையும் எனக்கு இல்லை என்று அனல் பறக்க பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில், வரும் 27ம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதலில் காலை 11மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்வார் எனவும், அதன்பின்னர் கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் பிரச்சாரம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.