நாகப்பட்டனத்தை நோக்கி விரையும் விஜய்.. போலீஸ் கடும் கட்டுப்பாடுகள்.. குவியும் தொண்டர்கள்

Su.tha Arivalagan
Sep 20, 2025,10:52 AM IST

நாகப்பட்டனம்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டனம் மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையிலிருந்து விஜய் கிளம்பி தற்போது நாகையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.


விஜய் தனது மக்கள் சந்திப்பை பிரச்சார சுற்றுப்பயணமாக தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக திருச்சி அரியலூரில் அவர் பிரச்சாரம் செய்தார். ஆனால் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால் அதில் பெரும் சலசலப்புகளும் ஏற்பட்டு விட்டன. திருச்சி நகரமே ஸ்தம்பித்துப் போனது. திட்டமிட்டபடி பெரம்பலூரில் பேச முடியாமல் போனது. இதனால் தற்போது வாரத்திற்கு 2 வாரங்கள் மட்டுமே என்று திட்டம் மாற்றப்பட்டுள்ளது.


அந்த வகையில் இன்று டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டனம், திருவாரூரில் விஜய் பேசவுள்ளார். நாகப்பட்டனம் புத்தூர் அண்ணா சிலை அருகே அவர் பேசவுள்ளார். இதற்காக அங்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டுள்ளனர். திருச்சி அனுபவத்தைத் தொடர்ந்து தற்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் கூடுதல் கவனத்துடன் இறங்கியுள்ளனர். போக்குவரத்து எந்த வகையிலும் பாதித்து விடாதபடி நடவடிக்கைகள் கிடுக்கிப்பிடியாக எடுக்கப்பட்டுள்ளன.




விஜய் வரும் இடங்களில் மின்சாரத்தைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் அரசியல் ரீதியாக சென்சிட்டிவான மாவட்டங்கள் என்பதால் காவல்துறையினர் அனைத்து வகையிலும் உஷாராக உள்ளனர்.


திருவாரூர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த மாவட்டம் என்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு விஜய் என்ன பேசப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து வருவதால், திருவாரூரில் அவரது பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையே, விஜய் தற்போது சென்னையிலிருந்து கிளம்பி நாகையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் கூட்ட இடத்திற்கு வந்தவுடன் பேசுவார். ஆனால் தற்போதே அந்த இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. எனவே திருச்சியைப் போலவே தனது வாகனத்தில் இருந்தபடியே கூட்டத்தினர் மத்தியில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.