விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை

Sep 19, 2025,05:13 PM IST

சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை நாகப்பட்டனத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில் தவெகவினருக்கு அக்கட்சி சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


திருச்சியில் நடந்த விஜய்யின் முதலாவது கூட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் தொண்டர்கள் கூடி விட்டதால் திட்டமிட்ட நேரத்தில் எதையும் செய்ய முடியாமல் போனது. மேலும் திருச்சி நகரமே அன்று ஸ்தம்பித்தும் போனது. இந்த நிலையில் நாளை நாகப்பட்டனத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று தவெக தலைமை விரும்புகிறது.


இதையடுத்து தற்போது விரிவான அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிக்கையை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




நம் வெற்றித் தலைவர் அவர்கள், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. 


நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள அவர், இந்தச் சுற்றுப் பயணத்தின் வாயிலாக மிகவும் மனம் நெகிழ்ந்து உள்ளார். ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.


2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.


3.கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


4.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.


5.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.


6.வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.


7.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.


8 தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.


9.மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.


10. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தவெக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்