முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
நாகை : திருச்சி, அரியலூர் பிரச்சாங்களின் போது பேசியதை விட மிகவும் கடுமையாக திமுக.,வையும், முதல்வர் குடும்பத்தையும் நேரடியாக தாக்கி, நாகை மாவட்ட கூட்டத்தில் பேசி உள்ளார் தவெக தலைவர் விஜய். இது திமுக.,விற்கு அதிர்ச்சியையும், மக்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் திருச்சி, அரியலூரில் பேசிய விஜய், உள்ளூர் பிரச்சனைகளை பட்டியலிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டைலில், "சொன்னீர்களே செய்தீர்களா" என கேட்டு பேசினார். பெரிதாக அரசியல் பேசாமல், திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மட்டும் தான் குற்றம்சாட்டி பேசினார்.
திருச்சியில் மைக் ரிப்பேரால் அவரது பேச்சு முழுமையாக யாருக்கும் புரியவில்லை. அரியலூர் வந்தபோது இரவாகி விட்டது. மேலும், "பேப்பரில் எழுதி வைத்து பேசுகிறார், விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் விமர்சித்து பேசினர். ஆனால் இன்று நாகையில் விஜய் பேசிய பேச்சு, இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் வேறுபட்டதாக இருந்ததை பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட முழுமையான ஒரு மாற்றத்தை தனது பேச்சில் கொண்டு வந்துள்ளார் விஜய்.
"மோடியும், அமித்ஷாவும் வந்தால் இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? கரென்ட் கட் செய்வீர்களா? செஞ்சு தான் பாருங்களேன்? என்ன சிஎம் சார் மிரட்டி பார்க்குறீங்களா? இந்த பூச்சாண்டி புடிக்கிறது, மிரட்டுவதற்கு எல்லாம் விஜய் ஆள் கிடையாது. குடும்ப அரசியல் செய்து கொள்ளை அடித்து வாழும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், உழைத்து சம்பாதித்து வாழும் எனக்கு எவ்வளவு இருக்கும்? வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?" என்பது போன்று மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அது மட்டுமல்ல, " இப்படி மிரட்டுவதை விட்டு விட்டு தில்லா, தைரியமா, கெத்தாக தேர்தல் களத்தில் போட்டியிடுங்க. நீங்களா நானா என பார்த்து விடலாம்" என முதல்வருக்குப் பகிரங்கமாக சவால் விட்டு பேசினார் விஜய்.
அதே போல் சீமான் முன் வைத்த விமர்சனத்தை உடைப்பது போன்று, பேப்பரில் எழுதி வைத்ததை படிக்காமல், இன்று விஜய் பேசிய அனைத்துமே அவராக பேசியது. உணர்ச்சி பொங்க பேசியது. " இந்த திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வர வேண்டுமா?" என விஜய் கேட்டது முழுமையான அரசியல்வாதியை போல் பேசியது உண்மையில் திமுக.,வையே கதி கலங்க வைத்திருக்கும்.
அதுவும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருக்கக் கூடிய நாகை மாவட்டத்திலேயே சென்று விஜய் இவ்வளவு மக்கள் கூட்டத்தை கூட்டி, முதல்வர் குடும்பத்தையும், திமுக.,வையும் தாக்கி பேசியதுடன், அவருக்கு சவாலும் விட்டுள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் அரசியல் பாடத்தை மிக நன்றாக கற்றுக் கொண்டுள்ளார் என்பதை விஜய்யின் இன்றைய நாகை மாவட்ட பிரச்சார பேச்சு காட்டுகிறது.