ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

Su.tha Arivalagan
Jun 18, 2026,01:07 PM IST

சென்னை : தமிழக சட்டமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் (18.06.2026) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடருக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.


காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஆளுநர் உரை:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க அரசு மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படித்தது இல்லை. ஆனால் தற்போதைய தவெக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஒன்று விடாமல் படித்துள்ளார். இதனால் த.வெ.க அரசுக்கும், பா.ஜ.க-விற்கும் இடையே ஏதேனும் இணக்கமான 'கனெக்ஷன்' ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


வெறும் 'Copy Paste' அரசு:




த.வெ.க அரசு அமைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இவர்கள் சொல்வதற்கென்று புதிய சாதனைகள் எதுவும் இல்லை என்றார். "இவர்கள் அறிவிப்பதெல்லாம் கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் தான், அதன் நீட்சிதான். தற்போதைய த.வெ.க அரசு என்பது வெறும் 'Copy Paste' அரசாக, 'ஸ்டிக்கர்' அரசாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று மிகக் கடுமையாகச் சாடினார்.


"கண்ணாடியைப் பார்த்து பேசுகிறீர்கள் சார்!"

பெண்களின் பாதுகாப்பு குறித்து தற்போதைய முதல்வர் பேசியதற்குப் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் பரப்புரையின் போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும் போது, திரைப்படத்தில் வருவது போல, 'கண்ணாடியைப் பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்' என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது" என்று திரைப்பட பாணியில் கிண்டலடித்துள்ளார்.


ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது:

தொடர்ந்து பேசிய அவர், த.வெ.க-வினர் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்களைச் சொல்லியிருந்தார்கள் எனக் குறிப்பிட்டார். "அந்த அறிவிப்புகளை எந்தக் காலத்தில் அவர்கள் நிறைவேற்றப் போகிறார்கள் என்பது குறித்த விபரங்கள் இந்த ஆளுநர் உரையில் இடம்பெறும் என நம்பி எதிர்பார்த்தோம். ஆனால், இந்த ஆளுநர் உரை பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது" என்று தனது பேட்டியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் மூன்று நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும், வினா-விடை பகுதி இருக்காது என்றும் சபாநாயகர் பிரபாகர் அறிவித்துள்ளார்.