"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

Jun 17, 2026,02:24 PM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக, திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காரசாரமான விமர்சனங்களையும் சவால்களையும் முன்வைத்துள்ளார். தவெக அரசின் இந்த அறிக்கை நிதிப் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களின் இயலாமையை மூடி மறைக்கவே இது வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.


செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.


"யாரைக் காப்பாற்ற 5 ஆண்டு அறிக்கை?"




அவர் பேசுகையில், "பொதுவாக ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும் போது கடந்த 10 ஆண்டுகால நிதி நிலவரத்தை விளக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிடுவது தான் மரபு. ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் சரி, முந்தைய 10 ஆண்டுகால நிதி நிலைமை குறித்த விரிவான அறிக்கைதான் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசு ஏன் 10 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை? வெறும் 5 ஆண்டுகால அறிக்கையை மட்டும் வெளியிட்டதன் பின்னணி என்ன? யாரைக் காப்பாற்ற இந்த 5 ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.


இது வெறும் ‘எஸ்கேப்பிசம்’!

மேலும், இந்த வெள்ளை அறிக்கையை "எஸ்கேப்பிசம்" (Escapeism - பொறுப்பில் இருந்து நழுவுதல்) என்று தங்கம் தென்னரசு வர்ணித்தார். தவெக அரசு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாமல், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தப்பிக்க முயல்கிறது. தங்களின் நிர்வாக இயலாமையை மறைப்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை என்ற போர்வையை அவர்கள் கையில் எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.


அரசியலில் இருந்து விலக தயார் :

தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு தங்கம் தென்னரசு ஒரு பகிரங்க சவாலை விடுத்தார். "தவெக அரசு இதே தற்போதைய பாணியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ. 20 லட்சம் கோடியாக உயரும். திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனை விட, நீங்கள் (தவெக அரசு) நிர்வாகத் திறமையோடு குறைவாகக் கடன் வாங்கிக் காட்டினால், நான் எனது அரசியல் பொறுப்பில் இருந்து விலகத் தயார்" என்று அதிரடி சவால் விடுத்துள்ளார்.


புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, முந்தைய திமுக அரசின் நிதி நிர்வாகத்தைக் கையாண்டு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள இந்த சவாலும் விமர்சனமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

Tamil Short Story: எதார்த்தம்!

news

ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்