நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

Su.tha Arivalagan
Apr 25, 2026,11:26 AM IST

- உமாராணி சங்கரலிங்கம்


2022ம் ஆண்டு ஜூலை 1, வெள்ளிக்கிழமை.


எங்களுடன் பயணம் செய்ய உள்ள மற்றவர்கள் 29.6.2022 புதன்கிழமை இரயிலில் கிளம்பி விட்டனர். எங்களுக்கு 1 ஆம் தேதி இண்டிகோ விமானம், 10.40. 8.15 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். செக்கிங் எல்லாம் முடிந்து விமானம் கிளம்பியவுடன் மனதில் ஒரு வித சந்தோஷம். 1.30 க்கு டில்லி டி2 நிலையத்தை அடைந்து, பின் அங்கிருந்து பேருந்து மூலம் டி1 நிலையத்திற்குச் சென்றோம். அங்கு அன்பு மணி அண்ணா, தேவசேனாவைச் சந்தித்தோம். 4.45 விமானம். 4.20 க்கு உள்ளே சென்று உட்கார்ந்து விட்டோம். 


மணி 4.45ஐக் கடந்து 5, 5.30, 6. விமானம் புறப்படவில்லை. என்னவென்றால் துணை விமானி ஜம்முவில் இருந்து வர வேண்டும் எனக் கூறினார்கள். இதன் நடுவில் ஒரு பயணி நான் கிளம்புகிறேன் எனக் கூறி கிளம்ப, மற்றவர்களின் பைகள் சரியாக உள்ளதா எனப் பரிசோதனை செய்தார்கள். எப்படியோ விமானி வரும் வரை எல்லோருக்கும் நேரம் போகணுமே. தாமதமானதால் எங்களுக்குச் சிற்றுண்டி மற்றும் பழச்சாறு கொடுத்தனர். 


6.15 மணிக்கு விமானி வர, இந்தப் பயணியும் நான் போகவில்லை இதிலேயே வருகிறேன் எனக் கூற, ஒருவழியாக 6.30 க்கு விமானத்தைப் புறப்படச் செய்தார்கள். 7.45 ஜம்முவை அடைந்தது. ஜம்மு விமான நிலையம் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு வந்தது. கீழே வந்து பயணப் பொதிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து வாடகை மகிழுந்து மூலம் ஜே.கே. விருந்தினர் விடுதி என்ற தங்குவிடுதிக்கு வந்தோம்.




பயங்கர நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி. இரவு தங்குவதற்கு மட்டும் தான். பின்னர் வெளியே சென்று சர்மா தந்தூரி என்ற கடையில் ரொட்டி, பருப்பு சாப்பிட்டோம். அதற்குள் என் முதுகுப் பையில் ஒரு ஜிப் கிழிந்து விட்டது. அதைத் தைப்பதற்கு அங்கே உள்ள கடையில் ஊசி, நூல் வாங்கித் தைத்தேன். அந்தப் பை 2019 கைலாஷ் யாத்திரையின் போது எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. என் பையின் எண் 911. என் கணவரின் பையின் எண் 912.

அடுத்த நாள் காலையில் தான் மற்றவர்கள் வந்தனர். 4 பேரைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள்.


எப்படி இருந்தது அடுத்த பயணம் என்பதைப் பற்றி மீண்டும் கூறுகின்றேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.


திருச்சிற்றம்பலம்.

ஓம் நமசிவாய.


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர்,  மன உளவியலாளர்)