மறக்க முடியுமா!
- கூ.சோ.ரேணுகா
சென்னை: எனக்கு ஒரு ஏழு எட்டு வயது இருக்கும். நானும் என் பெற்றோரும் என் சகோதரர் சகோதரியுடன் திருமலையில் இரவு தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம் மணி பதினொன்று இருக்கலாம்.
சோ என்ற மழை பெய்து கொண்டிருந்தது. சென்னை போன்ற சமதள நிலப்பரப்பிற்கும் திருமலை போன்ற மலைப்பிரதேசத்திற்கும் சாதாரணமாகவே அதிகப்படியான வேறுபாடு காற்றின் ஓசையிலும் வேகத்திலும் இருக்கும். ஆனால் அன்றோ புயல் வீசிக் கொண்டிருந்தது. அந்த பெரும் பாறைகளின் இடையே காற்று சுழன்று வந்த ஓசை எங்களையும் சேர்த்து சுழற்றிக் கொண்டிருந்தது.
நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தோம், மழையில் நனைந்து கொண்டே.
ஏனெனில் நாங்கள் நின்றிருந்த ஒரு தகர கூரை எங்கள் கண்முன்னே பறந்து சென்று எங்கோ விழுந்தது. உண்மையில் பயம் என்றால் என்ன என்பது நாங்கள் குடும்பமாக உணர்ந்த நேரம் அது. மலை பாறைகளுக்கு இடையே மழையில் நனைந்தபடி அச்சுறுத்தும் காற்றின் வேகத்தில் மனதும் வயிறும் கலங்கிப் போனது. அவ்வேளையிலே அங்கு ஒரு மகிழுந்து வந்தது. எங்களுக்கு உதவ அவர் திரும்ப எத்தனிக்க அந்த மகிழுந்து அங்கிருந்த பாறையிலே இடித்துக் கொண்டு நின்றது.
பின்பு அந்த ஊர்தி ஓட்டுநர் அவ்வெண்ணத்தை கைவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விட்டார். ஒரு 2 மணி நேரம் மழையில் நனைந்த கோழிக்குஞ்சுகளாய் குடும்பத்துடன் அங்கே நாங்கள் நின்றிருந்தோம். சற்று காற்றும் மழையும் நிதானித்த பின் நாங்கள் மெதுவாக தங்கி இருந்த அறைக்கு நடந்து சென்றோம்.
அன்றைய இரவு வாழ்வில் எந்நாளிலும் மறக்க இயலாது. சமதள நிலத்தில் கேட்கும் காற்றின் ஓசையும் மழையின் சத்தமும் வேறு, மலை உச்சியில் புயலின் போது அது ஏற்படுத்தும் தாக்கம் வேறு அதை உணர்த்திய நாள் அந்நாள்.
(கூ.சோ. ரேணுகா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)