சீனாவிலிருந்து திரும்பிய கையோடு.. ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்த.. டிரம்ப் திட்டம்?

Su.tha Arivalagan
May 16, 2026,10:53 AM IST

வாஷிங்டன்: சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனால்தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எரிபொருள் பயன்பாடு குறித்து சிக்கணம் கடைப்பிடிக்க தத்தமது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டு வருகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சீனா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக எபிக் பியூரி 2.0 என்ற பெயரில் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




ஈரான் தனது அணுஆயுதச் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். சீனாவின் உதவியுடன் இந்தப் பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஈரானின் பிடிவாதமான போக்கால் ராணுவ நடவடிக்கையே தீர்வாக இருக்கும் என அமெரிக்க நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.


ட்ரம்ப்பின் இந்த அதிரடி முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு ஒரு பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.


சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முடிவு, சர்வதேச அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தால் வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.