வாஷிங்டன்: ஈரானால் சுடப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து மாயமான வீரரை, அமெரிக்கப் படைகள் துணிச்சலான தேடுதல் வேட்டை நடத்தி பத்திரமாக மீட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரானியப் படைகளால் அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் என்ற போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதால் அமெரிக்காவிலும் பரபரப்பு அதிகரித்தது.
இதில் பயணித்த இரு வீரர்களில், விமானி அன்றைய தினமே மீட்கப்பட்டார். ஆனால், அந்த விமானத்தில் பயணித்த Weapons System Office எனப்படும் வீரர் மாயமானார். அவரைத் தேடும் பணியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.
அந்த வீரரை ஈரானும் தேடி வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவரை மீட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், "அவரை நாங்கள் மீட்டுவிட்டோம்" என்று தெரிவித்தார்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த, அபாயகரமான ஆயுதங்கள் ஏந்திய டஜன் கணக்கான போர் விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்களைக் கொண்டு இந்த மீட்புப் பணி நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
ஈரானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்து, ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்த மீட்புப் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்ட அமெரிக்க விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
மீட்புப் பணியில் HH-60W 'ஜோலி கிரீன் II' ரக ஹெலிகாப்டர்கள், A-10 வார்தாக் போர் விமானங்கள் மற்றும் F-35 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
மாயமான வீரரைத் தேடும் போது, அவர் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டதாக தவறான தகவலை ஈரான் தரப்பில் பரப்பி, சிஐஏ ஒரு தந்திரமான நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் ஈரானியப் படைகளின் கவனத்தைத் திசைதிருப்பி அந்த வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட வீரர் தற்போது காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவர் உயிருக்கு ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்க வீரர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்" என்று கூறிய டிரம்ப், இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஈரானிய வான்பரப்பில் தனது முழு ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவித்தார். ஈரானியப் படைகள் அந்த வீரரைப் பிடித்துத் தருபவர்களுக்கு 66,000 டாலர் வெகுமதி அறிவித்திருந்த நிலையிலும், அமெரிக்கா இந்த அதிரடி மீட்புப் பணியை சாத்தியமாக்கியுள்ளது.
ஈரான் தரப்பில், அமெரிக்காவின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மற்றொரு விமானத்தை அழித்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், அமெரிக்கத் தரப்பு அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
{{comments.comment}}