இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

Su.tha Arivalagan
Feb 07, 2026,12:53 PM IST

டெல்லி: 175 ரன்கள் குவித்தும் இந்தியா சீனியர் அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர முடியாத நிலை உள்ளது. இதற்குக் காரணம் பிசிசிஐயின் ஒரு விதிதான். 


19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்தார் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி. அவரது இந்த அதிரடி ஆட்டம், அவரை உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.


இருப்பினும், அதற்கு வாய்ப்பில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமே நினைத்தாலும் கூட, அவரை இப்போதே சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்க முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ள ஒரு முக்கியமான விதியே தடையாக உள்ளது.




ஏன் இந்தத் தடை? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விளையாட வேண்டுமானால், அவருக்கு குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வீரர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்த விதி கொண்டுவரப்பட்டது.


வைபவ் சூர்யவன்ஷி மார்ச் 27, 2011 அன்று பிறந்தவர். தற்போது அவருக்கு 14 வயது மட்டுமே ஆகிறது. இதன்படி பார்த்தால், அவர் 15 வயதை எட்டும் மார்ச் 27, 2026-க்குப் பிறகுதான் இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகும் தகுதியைப் பெறுவார். அதுவரை அவர் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.


நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அவர் விளாசிய 175 ரன்களில் 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஏற்கெனவே ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட இவர், மிகச்சிறிய வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் சிறு வயதிலேயே அறிமுகமானாலும், தற்போதைய ஐசிசி விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்த இளம் புயலின் வருகைக்காக இந்திய ரசிகர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.