வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சொர்க்கவாசல் திறப்பு!
வே.தங்கப்பிரியா
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான சொர்க்கவாசல் திறப்பு விழா கோலாகலமாக நாளை நடைபெற இருக்கிறது.பெரும்பாலான பெருமாள் கோவில்களில் டிசம்பர் 30ம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெறும். இது ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வாகும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், நாமக்கல் அரங்கநாதர் கோவில், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் போன்ற பல பெருமாள் கோவில்களில் இந்த நிகழ்வு நடைபெறும்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நான் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு முக்கியமான நாளாகும். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் அதிகாலையில் பெருமாள் ரத்தின அங்கியில் வலம் வந்து சொர்க்கவாசல் வழியாக காட்சியளிப்பார். இந்த வாசல் வழியாக சென்று தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. வருடத்தின் அனைத்து மாதங்களிலும் இரு முறை ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மட்டும் அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும்.
அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் அதை கடந்து செல்லும் போது, ஆயிரக்கணக்கான பக்தர்களும், "நாராயணா...கோவிந்தா" கோஷம் முழங்க அவரை பின் தொடர்ந்து பரமபத வாசலை கடந்து செல்வார்கள். பக்தர்கள் இந்நாளன்று கண் விழித்து விரதம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு விரதம் இருந்தால் நம் வாழ்வில் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும். ஏகாதசி நன்னாளில், ஓம் நமோ நாராயணாய என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்தால் பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)