தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா

Su.tha Arivalagan
Mar 24, 2026,02:33 PM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும், சமத்துவக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் முக்கிய சக்தியாகவும் திகழ்கிறது. தொடர்ச்சியான விடா முயற்சிகளின் காரணமாக தவிர்க்க முடியாத ஒரு தலித் சக்தியாக விடுதலைத் சிறுத்தைகளை மாற்றி வைத்துள்ளார் திருமாவளவன்.


தொடக்கத்தில் தேர்தல் அரசியலைத் தவிர்த்து வந்த இக்கட்சி, 1999ஆம் ஆண்டு முதல் ஜனநாயகத் தேர்தல்களில் பங்கெடுக்கத் தொடங்கியது. அதன் ஆரம்பகாலத் தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைவாகத் தெரிந்தாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் இக்கட்சிக்கு இருந்த செல்வாக்கு மற்ற பெரிய கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக வட தமிழகத்தில் தலித் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் விசிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது.


2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விசிக, இரண்டு இடங்களில் வெற்றி பெற்று தனது முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் கணக்கைத் தொடங்கியது. அப்போது அக்கட்சி சுமார் 1.29 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பத்து இடங்களில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், அந்தத் தேர்தலில் விசிக பெற்ற வாக்கு சதவீதம் 1.51 ஆக அதிகரித்தது. இது கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதைக் காட்டியது.




2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் விசிக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாகும். அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தவிர்த்து, 'மக்கள் நலக் கூட்டணி' என்ற மூன்றாவது அணியில் இணைந்து 25 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், கட்சியின் தனித்துவமான அடையாளம் மாநிலம் முழுவதும் பரவியது. அந்தத் தேர்தலில் விசிக 0.81 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தது. இடங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கொள்கை ரீதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்த விசிக, ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு பொதுத் தொகுதிகளிலும், இரண்டு தனித் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விசிக ஒரு அனைவருக்குமான கட்சி என்ற பிம்பத்தை வலுப்படுத்தியது. இந்தத் தேர்தலில் சுமார் 0.99 சதவீத வாக்குகளைப் பெற்றது. கூட்டணி பலத்தால் குறைவான இடங்களில் போட்டியிட்டதால் ஒட்டுமொத்த சதவீதத்தில் பெரிய மாற்றம் தெரியவில்லை என்றாலும், போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற வாக்குகள் மிகவும் அதிகமாக இருந்தன.


இறுதியாக, 2024 மக்களவைத் தேர்தல் விசிகவின் அரசியல் பயணத்தில் ஒரு மகுடமாக அமைந்தது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தத் தேர்தலில் தமிழக அளவில் சுமார் 2.25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் விசிக பெற்றுள்ளது. இது அக்கட்சியின் முப்பது ஆண்டுகால உழைப்பிற்கும், தேர்தல் களத்தில் காட்டிய உறுதிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.


சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை விசிக ஜெயித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிகபட்சம்  2 தொகுதிகள் வரை அது வென்றுள்ளது. மாநிலங்களவைக்கு இதுவரை விசிக சென்றதில்லை. அந்தக் குறையும் விரைவில் நீங்கக் கூடும். 


திருமாவளவன் சொல்வது போல ஒரு சீட், 2 சீட்டுக்காக அடிக்கடி கூட்டணியை மாற்றுவதில்லை என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.