விடியலின் காதல்
Feb 07, 2026,10:21 AM IST
- கவிதா அறிவழகன்
விடியல் என் முதல் காதல்,
விடியலின் சுவாசம் என் மூச்சு,
தூரத்து கோயில் மணி,
தூக்கத்தில் இருந்த என்னை,
துயிலெழுப்பும் ஒரு தாலாட்டு.
பனித்துளிகள் நனைந்த புற்களின் மீது,
பதிய நடந்த பாதம்,
நனைவதில் ஒரு பரவசம்.
இருளை மெல்ல விழுங்கிய
அழகிய விடியல்,
கதிரவனின் மென்மையான சிரிப்பு,
இதயத்தினுள் விதைத்த
புதிய ஒரு நம்பிக்கை.
குருவிகளின் கீச்சொலியில்
ஒரு ராகம்,
ஆன்மாவின் பன்முக ராகம்,
இயற்கை வாசிக்கும்,
மௌன கீதங்கள்.
விடியலின் சிவப்பு துளியில் ஜனித்த ரோஜா,
என்னை அழைத்தது,
அதன் ஸ்பரிசம்
மெய் மலரச் செய்தது.
தென்றலோ என்னை தழுவி செல்ல செல்ல,
நேற்றைய கவலைகளை
மறக்கடித்தது.
அன்பான விடியலே,
இன்றைய பொழுதினை,
அழகிய கவிதையாக
ஆற்றியது நீ தானோ...
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri).