விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்
சென்னை: திமுக எதிர்ப்பை விட, வெறுப்பைத்தான் விஜய் அரசியலாகப் பேசுகிறார். தான் என்ன செய்யப்போகிறேன் என்று அவர் வேசுவதில்லை. மாறாக வெறுப்பு அரசியலையே முன் வைக்கிறார். அது எடுபடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜிஎஸ்டி மூலம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். காலம் தாழ்ந்த முடிவாக பிரதமர் மோடியின் முடிவு உள்ளது. இதனால் பெரிய பலன் எளிய மக்களுக்கு கிட்டவில்லை என்றாலும் கூட இந்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. அதிமுக மக்கள் செல்வாக்கு உடைய கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. அது ஒரு திராவிட இயக்கம். ஈவெரா, அண்ணாதுரை கொள்கைகளை உள்வாங்கி கொண்டு மக்களுக்கு பணியாற்றி இயக்கம்.
எந்த மாநாடு நடத்தினாலும், பேரணி நடத்தினாலும் ஆளுங்கட்சி கூட்டணியாக இருந்தாலும் எங்களும் தரும் நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு அரசோ, போலீசாரோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. விஜய்க்கு தான் அவை புதிதாக இருக்கிறது. எங்களுக்கு 35 வருடங்களாக பழகிவிட்டது. சுதந்திரமாக பயணிக்கிறார். அவர் சுதந்திரமாக பேசுகிறார். திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை அவர் அரசியலாக பேசி கொண்டு இருக்கிறார்.
எதிர்ப்பு என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்ய போகிறோம். தான் செய்யப்போவது என்ன என்பதை விட, திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன் வைக்கிறார் விஜய். வெறுப்பு அரசியல் பெரிதும் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள் குறித்து என்ன பேசுவார் என்று மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.