மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்

Meenakshi
Feb 02, 2026,05:53 PM IST

சென்னை: மக்கள் முக்கியம் இல்லை. என்னுடைய பதவி தான் முக்கியம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் விஜய் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி இன்று பனையூரில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், இது குறித்து திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், விஜய்க்கு எதிராக நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை, அவரை புறக்கணிக்கிறோம். கரூர் பிரச்சாரத்தின் போது காலை 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மாலை 7 மணிக்கு வந்த காரணத்தினால் குடிக்க தண்ணீர் இல்லாமல் உணவில்லாமல் மயக்கம் போட்டு விழுந்து இறந்துள்ளார்கள். அதற்கு பொறுப்பு ஏற்காமல் அதைக் கூட திமுக தான் செய்தது என பொய் பிரச்சாரம் விஜய் செய்து வருகிறார். 




எம்ஜிஆர் மக்களுக்காகவே வாழ்ந்தவர். விஜய் அவரது கொள்கை என்ன என்பது குறித்து இதுவரை பேசாமல் திமுகவை திட்டுவது தான் கொள்கையாக வைத்துள்ளார். எம்ஜிஆர் மக்களுக்கான திட்டங்களை முன்வைத்து திரைப்படங்களை எடுத்தவர். எம்ஜிஆர் திரைப்படங்களில் கொள்கை சார்ந்த கருத்துக்கள் இருக்கும். எம்ஜிஆர் ரோடு விஜய் ஒப்பிடுவது அதீத கற்பனை. எப்படியாவது முதலமைச்சராக வேண்டுமென்ற கனவில் விஜய் உள்ளார். எனவே, முதலமைச்சராக இருப்பவரைப் பற்றி குறை சொன்னால் தான் தன்னை முதலமைச்சராக்குவார்கள் என நினைத்துப் பேசுகிறார். எம்ஜிஆர் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர் அவர்தான் எங்களை எதிர்த்தார். எம்ஜிஆர் உடன் விஜய் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம் என தமிழ்நாடு மக்களுக்கு தெரியும்.


எங்களுடைய ஆட்கள் எந்த அராஜகத்திலும் இறங்குவதில்லை. தண்ணீர் உணவில்லாமல் மயங்கி கிடந்தவர்களை காப்பாற்றாமல் விஜய் ரசிகர்கள் காலால் எட்டி உதைத்து சென்ற காட்சியை நாம் பார்த்தோம். எது அநீதி, எது அக்கிரமம் என மக்கள் பார்த்துக் கொண்டுள்ளார்கள். விஜய் முதலமைச்சர் கனவில் உள்ளார். அரசியலுக்கு வந்த உடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் உள்ளார். முதல்வரே விசில் சினத்திற்கு வாக்களிப்பார் என்பது நகைச்சுவை. மிகச்சிறந்த காமெடியனாக விஜய் வாழ்ந்து வருகிறார். கதாநாயகன் வாய்ப்பு போய்விட்டால் நகைச்சுவை நடிகர் வாய்ப்பு கிடைக்கும் என முயற்சி செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. மக்கள் முக்கியம் இல்லை. என்னுடைய பதிவி தான் முக்கியம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் விஜய் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.