மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
சென்னை : மகளிர் உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு தவெக தான் காரணம். வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தத்தை கேட்டு பயந்து தான் திமுக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகளிர் உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உடனடியாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையிலேயே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவித்துள்ளன. தோல்வி பயத்தால் தான் திமுக இத்தகைய அறிக்கை வெளியிடுவதாக அவர்கள் கூறி உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு தவெக தான் காரணம் என்ற புதிய தகவல் ஒன்றை தெளிவித்துள்ளார் விஜய்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போது கூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக் கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி". என குறிப்பிட்டுள்ளார்.