விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் பிரச்சாரம் இன்று தொடங்கவுள்ள நிலையில் அவரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களால் அந்தப் பகுதியே திணறிப் போனது.
விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்யை வரவேற்கத் திரண்டதால் அந்தப் பகுதி முழுக்க தவெகவினர் மயமாக் காணப்பட்டது. முன்னதாக சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார் விஜய்.
அதன் பின்னர் அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரச்சார பேருந்தில் ஏறி திருச்சியில் தனது முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ள மரக்கடை பகுதி நோக்கிக் கிளம்பினா். ஆனால் பஸ்ஸால் சுமூகமாகப் போக முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்துதான் பஸ் போக முடிகிறது. அந்த அளவுக்கு வழியெங்கும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு விஜய்யை கிட்டத்தட்ட ஊர்வலம் போல கூட்டிச் செல்கின்றனர்.
ரோடுஷோ போகக் கூடாது என்பது காவல்துறை விதித்துள்ள ஒரு நிபந்தனை. ஆனால் தற்போது ரோடுஷோ போலத்தான் விஜய்யை அவரது கட்சித் தொண்டர்கள் கூட்டிச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு பல ஆயிரம் பேர் திரண்டு உள்ளனர். ஏற்கனவே மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கில் விஜய் பேச்சை கேட்க தொண்டர்கள் திரண்டுக் காத்துள்ளனர். வழியெங்கிலும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருப்பதால் திருச்சியே திணறிப் போய்க் காணப்படுகிறது.
விஜய் குறிப்பிட்ட நேரத்துக்குள் மரக்கடைக்கு வந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருச்சியில் கிட்டத்தட்ட மினி மாநாடு நடக்கிறதோ என்ற உணர்வு ஏற்படும் அளவுக்கு தவெகவினர் பெரும் எழுச்சியுடன் கூடிக் காணப்படுகின்றனர்.