பேச்சில் சுவை!

Su.tha Arivalagan
Aug 12, 2026,03:13 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


மிக ஆர்வத்தோடு அருமையாகவும் ருசியாகவும் பல உணவு வகைகளை சமைத்து வைத்தல் ஒரு கலை தான். ஆனால் அதை பரிமாறல் அதை விட முக்கியம். சாப்பிட அழைக்கும் விதம் மிக மிக முக்கியம். இங்கு தான் பேசும் அழகு வெளிப்படும். வெளிப்படவேண்டும்


கலைகளில் மிக சிறப்பு வாய்ந்தது பேச்சுக் கலை. பிள்ளைப்பிராயத்தில் இருந்து கடைசி மூச்சு இருக்கும்வரை பேச்சு நம்மோடு உறவாடும். அப்படி என்றால் அது எத்தனை நேர்த்தியாக இருக்க வேண்டும்?


சாதாரணமாக குடும்பத்தில் ஒருவருக்குருவர் பேசிக்கொள்ளும்போது அது மரியாதை, அன்பு, நல்லெண்ணம் நிறைந்து இருந்தால் அந்த பழக்கம் என்றும், எங்கும் கைகொடுக்கும்.


அருமையான சாப்பாடு இலையில் பரிமாறி, "வந்து கொட்டிக்கோ" என்று அழைத்தால் எப்படி இருக்கும்? நேர் மாறாக "சாப்பிட வாங்களேன்" என்று அன்போடு அழைத்து பாருங்களேன். உணவு அமிர்தமாக இறங்கும்.


மேடைப் பேச்சுகள் என்று வரும்போது மிகவும் கவனத்தோடு பேசவேண்டும். நம் எதிரில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து,வழுவாமல் இருக்கும் வண்ணம் பேச வேண்டும். பேச்சின் நடுவே சில கேள்விகளை கேட்டு அவர்களை சிந்திக்கவும் வைக்க வேண்டும்.




மலர்ந்த முகம் அத்தியாவசியம். அதுவே ஒரு சோக நிகழ்வில் முகத்தில் சோகம் நிழலாட பேசவேண்டும்.  சிறு சிறு உடல் அசைவுகள் பேச்சை இன்னும் அழகுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. சிரிப்பை வரவழைத்து,கை தட்டல் சபையோரிடம் இருந்து கிடைக்கவேண்டும் என்றால் எந்த தர்க்கம்,குதர்க்கம் இல்லாமல் அவர்கள் வழியே போய் அவர்களை நம் பேச்சுத் திறனால் வசப்படுத்தல் அத்தியாவசியம்.

 

ஒருவருடைய குணம்,தரம், வளர்ப்பு, பண்பும் பண்பாடும்,எல்லாவற்றையும்  பொய் யில்லாமல் பறைசாற்றுவது அவருடைய பேச்சு தான். அடுத்த தடவை இப்படி பேசிப் பாருங்களேன். உங்களையும் உங்கள் பேச்சையும் அடிக்கடி பார்த்து கேட்க ஆவலோடு சந்தர்ப்பத்தை காத்து இருப்பார்கள். சரிதானே?


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)