விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
சென்னை: விஜய்க்கு பேச எழுதிக் கொடுத்தவர்கள் முழுமையான தரவுகள் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். விஜய் உண்மைத் தன்மை அறிந்து பேச வேண்டும். அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே பேசுவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், புதுச்சேரியில் போலி மருந்து சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். போலி மருந்து சம்பந்தமாக 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் போலி மருந்து அரசு கொள்முதல் செய்தது. அதனால் சிபிஐ கைது நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் அளித்தார்.
போலி மருந்து விவகாரத்தில் அரசு எந்த பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்துள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தனக்கும் முதலமைச்சருக்கும் இல்லை. புதுச்சேரியில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் விஜய் புதுச்சேரி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சென்று இருக்கிறார் அதை வன்மையாக கண்டிக்கிறோம் மறுக்கின்றோம்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து சம்பந்தமாக 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறி மாநில அந்தஸ்து கோரிக்கை தற்போது தான் வைத்த மாதிரியும் மத்திய அரசின் மீது குறை சொல்லி பரப்புரையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார் இது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலம் புதுச்சேரி தான் என்றும், ஊழல் குற்றச்சாட்டிற்காக அமைச்சர் மாற்றப்பட்டு இருக்கிறார் என்று விஜய் கூறியது தவறானது, சுழற்சி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காகவே மாற்றம் செய்யப்பட்டது. என்று விளக்கம் அளித்த நமச்சிவாயம். தமிழகத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேச முடியாததால் கரூர் சம்பவத்துக்கு பிறகு 72 நாள் கழித்து புதுச்சேரியில் ஏதோ சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார் என்று விமர்சித்தார்.
விஜய்க்கு பேச எழுதிக் கொடுத்தவர்கள் முழுமையான தரவுகள் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். விஜய் உண்மைத் தன்மை அறிந்து பேச வேண்டும். அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே பேசுவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று காட்டமாக கூறினார். புதுவை மாநில மக்களுக்கு எந்த ஆட்சி இருந்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்பது நன்றாக தெரியும். 2026 ஆம் ஆண்டு புதுவை மாநில மக்கள் ஆசியோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்கள் அதில் பாராளுமன்ற எம்பி வைத்திலிங்கம் முதல் நன்றாக கையெழுத்திட்டு லோக்சபா சபாநாயகர் இடம் வழங்கியிருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தீபம் என்பது காலம் காலமாக நீண்ட நெடுங்காலமாக ஏற்றப்பட்ட ஒரு விஷயத்தை இன்றைக்கு இந்து மக்கள் மனம் புண்படும்படி, மக்கள் விரோத சக்திகளாக செயலும் செயல்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.. தொடர்ந்து இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.